சிறுவர்களின் திறன் விருத்திக்கு சிறுவர் சந்தை உதவுகிறது – இராமநாதன் கல்லூரி முன்னாள் அதிபர் தெரிவிப்பு!
Share
சிறுவர்களின் ஆரோக்கியமான வாழ்வுக்கும் அறிவுத்திறன் விருத்திக்கும் சிறுவர் சந்தைகள் பெரிதும் உதவுவதாக இராமநாதன் கல்லூரியின் முன்னாள் அதிபரும் தற்போதைய இணுவில் பொது நூலகத்தின் திறன் விருத்தி மையத்தின் அதிபருமான திருமதி கமல ராணி கிருஷ்ணபிள்ளை தெரிவித்தார்.
இன்றையதினம் வியாழக்கிழமை இணுவில் பொது நூலகத்தின் திறன் விருத்தி மையத்தின் மாணவர்களுக்கான சிறுவர் சந்தையை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாணவர்களுக்கு சிறுவர் சந்தை அவசியம் தானா என சிலர் கேட்கக்கூடும். தற்போது மாறிவரும் சூழலில் எத்தனையோ சிறுவர்களுக்கு சந்தை தெரியாது அவர்களை பெற்றோரும் கூட்டிச் செல்வதில்லை.
அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன வேலைப்பளு நேரமின்மை இவ்வாறான நிலையை கருத்தில் கொண்டு சிறுவர்களுக்கான சந்தையை அவர்கள் கற்கும் பாடசாலைகளில் ஏற்படுத்தப்படுகிறது.
இந்த சந்தை மூலம் பல உற்பத்தி பொருட்களை சிறுவர்கள் அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளதுடன் அவர்களின் கிரகிக்கும் திறன் விருத்தி அடைவதுடன் எதிர்காலத்தில் தலைமைத்துவ பாங்கையும் வளர்த்து நிற்கிறது.
நான் பிரபல பாடசாலையில் அதிபராக இருந்து 60 வயதிலேயே ஓய்வு பெற்றேன். அரசாங்கம் 60 வயதிலேயே அரச உத்தியோகத்தர்களுக்கு ஓய்வை வழங்குவது சரியான விடயம் தான். ஏனெனில் அறுபது வயதுக்குப் பின்னர் செயல்படுவது பலருக்கு கடினமான விடயம்.
இருந்தாலும் இணுவில் பொது நூலகத்தின் திறன் விருத்தி மையத்தின் அதிபராக என்னை சேவையாற்ற வருமாறு அழைத்த நிலையில் என்னால் முடிந்த வரை சமூகத்திற்கு சேவையாற்றுவேன்.
மேலும் இணுவில் பொது நூலகத்தின் திறன் விருத்தி மையம் சிறப்பாக இயங்கி வருவதுடன் மாணவர்களுக்கு பல்வேறு செயல்பாடுகளை இந்த மையத்தில் உருவாக்கி செயல்படுத்தி வருகின்றனர்.
ஆகவே சிறுபராயத்தில் இருந்து மாணவர்களின் திறன் விருத்தியை வளர்த்துக் கொள்வதற்கு இவ்வாறான சிறுவர் சந்தைகள் பெரிதும் உதவும் என அவர் மேலும் தெரிவித்தார்.