LOADING

Type to search

இலங்கை அரசியல்

கட்சிகளாகச் சிதறும் தமிழ் மக்கள் | யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்

Share

ஜனாதிபதித் தேர்தலில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்திய பொழுதுதேசமாகத் திரள்வோம்என்று கூறப்பட்டது. ஆனால் வர இருக்கும் பொதுத் தேர்தலில் கட்சிகளாகச் சிதறுவோம் அல்லது குழுக்களாகச் சிதறுவோம் அல்லது கட்சிக்குள் அணிகளாகச் சிதறுவோம் அல்லது தேசத்துக்கு எதிராகத் சிதறுவோம் என்ற கோஷத்தை முன்வைக்க வேண்டி வருமா ?

நடப்பு நிலைமைகளைத் தொகுத்துப் பார்க்கும் பொழுது தமிழ்த்தேசிய அரசியல் எனப்படுவது அப்படித்தான் காட்சி தருகின்றது. தேசியவாத அரசியல் என்பது மக்களை திரளாகக் கூட்டிக் கட்டுவது. மக்களை கூட்டுணர்வின் அடிப்படையில் ஒரு தேசமாகத் திரட்டுவது. ஆனால் கட்சிகள் மத்தியில் கூட்டுணர்வு இருந்தால்தான் அவை மக்களைக் கூட்டிக் கட்ட முடியும். கட்சிகள் மத்தியில் அது இல்லையென்றால் எப்படி மக்களைத் தேசமாகத் திரட்டுவது

உள்ளதில் பெரிய கட்சியாகிய தமிழரசுக் கட்சி ஒரு தனிநபரின் கருவியாக மாறி அந்தத் தனிநபரை வெல்ல வைப்பதற்காக அவருடைய விசுவாசிகளை வேட்பாளர் பட்டியலில் சேர்த்திருக்கின்றது. அந்த விசுவாசிகள் தோற்பதற்காக நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். தமது விசுவாசமான தலைவருக்கு விருப்பு வாக்குகளை பெற்றுக் கொடுப்பதுதான் அவர்களுடைய வேலை. ஒரு மூத்த கட்சியானது வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பொழுது என்னென்ன அளவுகோல்களை வைத்து அதைச் செய்திருக்க வேண்டுமோ அதைச் செய்யவில்லை. பதிலாக விசுவாசம் என்ற ஒரே அளவுகோலை வைத்து வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்களா ?

ஆனால் அதைக் கேள்வி கேட்க வேண்டிய மூத்தவர்களும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் கட்சிக்குள் தலைவராக தெரிவு செய்யப்பட்ட  சிறீதரனும் என்ன செய்கிறார்கள்? சிறீதரனுடைய ஆதரவாளர்கள் ரஜினிகாந்தின் படத்தில் வரும் ஒரு பன்ச் டயலக்கை பரவலாகப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். ” சிங்கம் எப்பொழுதும் சிங்கிளாகத்தான் வரும். பன்றிகள்தான் கும்பலாக வரும்என்ற வசனம் அது. அதாவது தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள பெரிய கட்சி சிங்கங்களும் பன்றிகளுமாக சிதறிப் போகிறது என்று பொருள். அது தேசியக் கூட்டுணர்வோடு ஒரு திரட்சியாக இல்லை என்று தெரிகிறது.

வேட்பாளர் பட்டியல் வெளிவந்ததிலிருந்து கட்சிக்குள் மகளிர் அணியும் தவறாசா அணியும் ஏனைய அணிகளும் நொதிக்கத் தொடங்கிவிட்டன. தவராசா அணி சுயேச்சையாகப் போட்டியிடலாம் என்று தெரிகிறது. சில வேளைகளில் இப்போது இருக்கும் ஏதாவது ஒரு கூட்டோடு அவர்கள் சேரவும் கூடும். ஆனால் ஒரு அணி கட்சியை விட்டு வெளியேறுகிறது என்று மட்டும் தெரிகிறது.

இவ்வாறு தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் பூசல்கள் ஏற்கனவே தூர்ந்து போன கட்சியை மேலும் சிதைக்கக்கூடும். அவ்வாறு தமிழரசுக் கட்சி பலவீனமடையும் பொழுது அதனால் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்புவதற்கு வேறு கட்சிகள் அல்லது வேறு கூட்டுக்கள் உண்டா?

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது தேசியவாத அரசியல் குறித்த பொருத்தமான நடைமுறைச் சாத்தியமான தரிசனங்களைக் கொண்டிராத ஒரு கட்சி. தங்களை தியாகிகள் ஆகவும் புனிதர்களாகவும் காட்டுவதற்காக மற்றவர்களுக்குத் துரோகிப் பட்டம் சூட்டும் ஒரு கட்சி. அரசியலில் நடைமுறைக்கு வராத கொள்கை, கொள்கையே அல்ல. ஏனென்றால் அரசியல் என்பது சாத்தியக்கூறுகளின் கலை.சாத்தியக்கூறானவற்றுக்கூடாக கொள்கையை எப்படிப் பரவலாக்கலாம், எப்படி மக்கள் மயப்படுத்தலாம், எப்படிக் கொள்கையை ஒரு திரண்ட அரசியல் சக்தியாக மாற்றலாம் என்றுதான் சிந்திக்க வேண்டும்

தூய தங்கத்தை வைத்துக்கொண்டு ஆபரணம் செய்ய முடியாது. அதில் செம்பு கலக்க வேண்டும். செம்பைக் கலக்காவிட்டால் தங்கம் பிரயோக நிலைக்கு வராது. அப்படித்தான் நடைமுறைச் சாத்தியமாகச் சிந்திக்காவிட்டால் கொள்கை மக்கள் மயப்படாது. இதுதான் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிடம் உள்ள பிரதான பலவீனம். அவர்களால் தேசத்தைத் திரட்ட முடியாது. எனவே தமிழரசுக் கட்சி விடும் வெற்றிடத்தில் ஒரு பிரதான நீரோட்டக் கட்சியாக மாறி ஆசனங்களைக் கைப்பற்றும் பலம், அதற்கு வேண்டிய அரசியல் தரிசனம், நடைமுறைச் சாத்தியமான அணுகுமுறை.. எவையும் அந்தக் கட்சியிடம் கிடையாது.

மூன்றாவதாக, விக்னேஸ்வரனின் கட்சி. அது இப்போதைக்கு பிரதான நீரோட்டக் கட்சியாக பலமாக எழும் என்று நம்பமுடியாத ஒரு கட்சிச் சூழல்தான் காணப்படுகிறது. நடக்கவிருக்கும் தேர்தல் அந்த கட்சியின் அடுத்த கட்ட வளர்ச்சியை அல்லது வீழ்ச்சியைக் காட்டும்.

அடுத்தது குத்து விளக்குக் கூட்டணி. அந்த கூட்டணி ஜனாதிபதி தேர்தலின் பின் சங்குச் சின்னத்தை கைப்பற்றியதன்மூலம் சங்குக் கூட்டணியாக மாறியிருக்கிறது. சங்குக்கு விழுந்த 2 லட்சத்து 26 ஆயிரம் வாக்குகளும் அந்த கூட்டணிக்குக் கிடைக்குமாக இருந்தால் குறைந்தது நான்குக்கும் குறையாத நாடாளுமன்ற ஆசனங்கள் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும். அது நடக்குமா ?

சங்குக்கு விழுந்த வாக்குகள் தேசத்திரட்சிக்கு விழுந்த வாக்குகள். அதில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் தேசத் திரட்சி என்ற அடிப்படையில் வாக்களித்திருக்கிறார்கள். அரியநேத்திரன் ஒரு குறியீட்டு வேட்பாளர். ஏறக்குறைய ஒரு துறவிபோல அவர் தேர்தலில் நின்றார். அவருக்கு வாக்குத் திரட்டுவதற்காக மக்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் துறவிகளைப் போல சம்பளம் வாங்காமல் இரவு பகலாக வேலை செய்தார்கள். அவரை வேட்பாளராக முன்னிறுத்திய பொதுக் கட்டமைப்பைச் சேர்ந்த கட்சிகள் எதிர்கால வாக்கு வங்கிகளை இலக்கு வைத்து உழைத்திருக்கலாம்தான். ஆனாலும் பொது வேட்பாளரை நோக்கி அவர்கள் திரட்டிய வாக்குகள் பொதுவானவை.பொதுவான வாக்குகள் இப்பொழுது ஐந்து கட்சிகளின் கூட்டமைப்பாக உள்ள சங்குக் கூட்டணிக்கு மட்டும் கிடைக்குமா?

கிடைக்காது. உதாரணமாக, கிளிநொச்சியில் தமிழரசுக் கட்சி சங்குக்காக வேலை செய்தது. அது முழுமையாக வேலை செய்ததா இல்லையா என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, அங்கு கிடைத்த வாக்குகள் அதிகம் தமிழரசுக் கட்சிக்கும் கிடைத்த வாக்குகள்தான். எனவே சிறீதரனா? சங்கா? என்று வரும் பொழுது சிறீதரனின் ஆதரவாளர்கள் அவருக்குத் தான் வாக்களிப்பார்கள். அப்படித்தான் மட்டக்களப்பிலும் அரியநேத்திரனுக்காக சிறீநேசனும் உட்பட பல மூத்த தமிழரசுக் கட்சிக்காரர்கள் ஒன்றாக நின்று உழைத்தார்கள். அவர்கள் திரட்டிய வாக்குகள் ஒரு பொது கணக்குக்கு உரியவை. தனிக் கணத்துக்கு உரியவை அல்ல. ஆனால் தனிக் கணக்கு என்று வரும் பொழுது நாடாளுமன்ற தேர்தலில் அவர்களுடைய வாக்குகள் வீட்டுக்குத்தான் விழும். சங்குக்கு அல்ல. அப்படித்தான் தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த அருண் தப்பிமுத்து திரட்டிய வாக்குகளும் சங்குக்கு விழாது. மேலும் யாழ்ப்பாணத்தில் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த சரவணபவன் உட்பட பலரும் சங்கின் வெற்றிக்காக உழைத்திருக்கிறார்கள். அவர்கள் சங்கில் நின்றால் அந்த வாக்குகளைச் சங்கு பெறும்.மாறாக அவர்கள் எந்தக் கட்சியோடு அல்லது எந்த சுயேட்சையோடு நிற்கிறார்களோ அதை நோக்கித்தான் அந்த வாக்குகள் போகும்.

அப்படித்தான் இப்பொழுது யாழ்ப்பாணத்தில் சுயேட்சையாக நிற்கும் ஒருங்கிணைந்த தமிழர்களுக்கான கட்டமைப்பும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளருக்காக விசுவாசமாக உழைத்தது. அந்த அணி இப்பொழுது சுயேட்சையாகக் கேட்கின்றது. எனவே பொது வேட்பாளருக்காக அவர்கள் சேகரித்த வாக்குகள் அந்த சுயேச்சைக்கு விழுமா அல்லது சங்குக்கு விழுமா?

இதுதான் பிரச்சினை. ஒரு சன்னியாசி போல அரியநேத்திரன் தேர்தலில் நின்ற பொழுது தமிழ் மக்கள் கூட்டுணர்வோடு அவருக்கு வாக்களித்தார்கள். அதே கூட்டுணர்வோடு இப்பொழுது வாக்களிக்க மாட்டார்கள். கட்சி விசுவாசம், தனி நபர் விசுவாசம், பிரதேச விசுவாசம், விருப்புவாக்கு வேட்டை போன்ற பல காரணிகளாலும் வாக்குகள் சிதறடிக்கப்படும் ஆபத்து அதிகம் உள்ள ஒரு தேர்தல் இது.

யாழ்ப்பாணத்தில் மட்டும் தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, சங்கு கூட்டணி, தமிழ் மக்கள் கூட்டணி, ஜேவிபியின் கூட்டணி, ரணில் விக்கிரமசிங்கவின் அணி, தவராசாவின் சுயேச்சை குழு உள்ளிடட சுயேச்சைகள்  என்று பல்வேறு தரப்புக்களும் தமிழ் வாக்குகளைச் சிதறடிக்கப் போகின்றன. இதில் அனுர அலை எந்த அளவுக்கு வாக்குகளைக் கவரும் என்பதை இப்பொழுது மதிப்பிடுவது கடினம்.

இந்த நிலைமை கிழக்கில் தோன்றினால், குறிப்பாக திருக்கோணமலையிலும் அம்பாறையிலும் தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விடும் என்ற அச்சம் அங்குள்ள சிவில் சமூகங்களிடம் உண்டு. திருகோணமலையில் கத்தோலிக்கத் திருச்சபையின் ஆயர் இது தொடர்பில் தலையிட்டிருக்கிறார். அந்தத் தலையீடு வெற்றி பெறுமாக இருந்தால் அங்கே போட்டித் தவிர்ப்பு உடன்படிக்கை ஒன்று எட்டப்படலாம். அதனால் வாக்குகள் சிதறுவது தடுக்கப்பட்டு குறைந்தபட்சம் ஒரு பிரதிநிதித்துவமாவது பாதுகாக்கப்படலாம்.அம்பாறையிலும் அவ்வாறு போட்டித் தவிர்ப்பு உத்திபற்றி உரையாடப்படுகின்றது.

ஆகமொத்தம் வரும் நாடாளுமன்றத் தேர்தலானது தமிழ் மக்களை வாக்காளர்களாகச் சிதறடிக்கப் போகிறது.சில கிழமைகளுக்கு முன்பு ஜனாதிபதித் தேர்தலில் தேசமாகத் திரள்வோம் என்ற கோஷம் பலமாக ஒலித்தது. ஆனால் துரதிஷ்டவசமாக நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் கட்சிகளாகச் சிதறும் ஆபத்தே அதிகரித்து வருகின்றது.