Government of Canada has been advised to grant permanent residency to all temporary workers in Canada.
Share
கனடாவிலுள்ள தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்கவேண்டுமென அரசாங்கத்திற்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது
கனடாவில் இரண்டு ஆண்டுகள் தொடர்ச்சியாக வசிக்கும் தற்காலிக பணியாளர்கள் தங்கள் சட்டப்பூர்வ தகுதியை இழக்கும் வகையிலும், நிச்சயமற்ற நிலையிலும் உள்ளதால் அவர்களுக்கு நிரந்தர அந்தஸ்து வழங்குவதற்காக அறிவிக்கப்பட்ட திட்டம் குறித்த விவரங்களை உடனடியாக வெளியிடுமாறும், மேலும் இந்த செயல்முறை நியாயமானதாகவும் அனைவரையும் உள்ளடக்கியதாகவும் இருப்பதை உறுதி செய்யுமாறும் ஒட்டாவா குடிவரவு அமைச்சிற்கு பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நிரந்தரமற்ற தொழில் அனுமதிபத்திரங்களைக் கொண்ட தற்காலிக வெளிநாட்டுத் தொழிலாளர்கள் நிரந்தர வதிவிடத்தைப் பெறுவார்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தத் திட்டம் குறித்து உடனடியாகவும் முறையாகவும் தெரிவிக்கத் தவறியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, குடிவரவு அமைச்சர் லீனா மெட்லெஜ் டயாப் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார் எனவும் அறியப்பட்டுள்ளது
இதுவரை, பொதுவெளியில் அறியப்பட்ட தகவல்களின்படி, 2026 மற்றும் 2027 ஆகிய இரண்டு ஆண்டுகளில் மொத்தம் 33,000 இடங்கள் ஒதுக்கப்படும். முக்கிய நகர மையங்களுக்கு வெளியே அதிக தேவை உள்ள துறைகளில் உள்ள திறமையான தற்காலிக வெளிநாட்டுத் தொழிலாளர்களை இது இலக்காகக் கொண்டுள்ளது. மேலும், இரண்டு ஆண்டுகள் கனடாவில் தொடர்ச்சியாக தொழில் செய்த அனுபவம் கட்டாயமாகும். போன்ற நிபந்தனை பூர்த்தி செய்தவர்கள் கூட அமைச்சரின் அறிவிப்பால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனவும் குடிவரவு அமைச்சிற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது
30-04-2026 வியாழக்கிழமை 38 சமூகக் குழுக்களின் சார்பாக கனடிய அரசாங்கத்திற்கும் குடிவரவு அமைச்சருக்கும் சமர்ப்பிக்கப்பெற்ற கடிதத்தில், புலம்பெயர்ந்தோர் உரிமைகள் வலையமைப்பு (Migrant Rights Network), என்னும் இந்த அமைப்பு இந்தத் திட்டத்தின் முழுமையான தகுதிகள், தகுதி விதிகள் மற்றும் விண்ணப்ப செயல்முறை குறித்த விவரங்களை கூடிய விரைவில் வெளியிடுமாறு கனடிய குடிவரவு குடியுரிமை அமைச்சர் டயாப்பிடம் கேட்டுக்கொண்டுள்ளது. அத்துடன் “குறைந்த திறன் மற்றும் குறைந்த ஊதியம் பெறுபவர்கள்” போன்றோரும் இந்த திட்டத்திற்குள் அடக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் எந்தவகையிலும் புறக்கணிக்கப்படக்கூடாது என்றும் மேற்படி அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
“அரசாங்கம் குறைந்த தகவல்களுடன், குறுகிய, காலவரையறைக்குட்பட்ட திட்டங்களைத் அறிமுகம் செய்யும் போது ஆராய்ந்து செயற்பட வேண்டும் என்;றும் இந்த தவறு காரணமாக ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்படுகிறார்கள், அல்லது மிகவும் பாதிக்கப்படுகின்றார்கள் அத்துடன் சுரண்டப்படுகிறார்கள்,” என்று அந்த உரிமைகள் வலையமைப்பின் சார்பில் குரல் கொடுக்குமு; சையத் ஹுசான் என்னும் செயற்பாட்டாளர் கூறினார்.
“கனடா முழுவதும் வசிக்கும் மற்றும் பணிபுரியும் புலம்பெயர்ந்தோருக்கு நிரந்தர வசிப்பிடத்தின் நிலைத்தன்மை தேவை என்பதை இந்தத் திட்டம் அங்கீகரிக்கிறது, ஆனால் அது இன்னும் விரிவாகச் செல்ல வேண்டும். குறுகிய, காலவரையறைக்குட்பட்ட திட்டங்கள், இங்கு தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கான ஒரு வாய்ப்புக்காகக் காத்திருக்கும் மக்களுக்குக் குழப்பம், சீர்குலைவு மற்றும் சுரண்டலை ஏற்படுத்துகின்றன.”
எனவே. இந்த சிறப்புத் திட்டத்திற்கான விண்ணப்ப செயல்முறை எளிமையானதாகவும், குறைந்த செலவுடையதாகவும், அணுகக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்று அந்த ஆதரவுக் குழு எழுதிய விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளது. மொழித் திறமை மற்றும் கல்வித் தகுதிகளின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நிராகரிக்கப்படக்கூடாது, மேலும் முக்கிய நகர்ப்புற மையங்களில் பணிபுரிபவர்களும் வசிப்பவர்களும் சமமாக நடத்தப்பட வேண்டும்.
“பெருநகரங்களிலும் வாழ்ந்தாலும் கிராமப்புறங்களில் வாழ்ந்தாலும் தொழிலாளர்கள் ஒரே தரத்தில் பார்க்கப்பட வேண்டும் அனைவருமே கனடாவிற்கு இன்றியமையாதவர்கள்,” என்றுஅமைப்பு அமைச்சர் டயாபிற்கு எழுதிய அதன் நான்கு பக்கக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.அத்துடன் “இது ஒரு நியாயமான திட்டம், புலம்பெயர்ந்தோரை புவியியல் ரீதியாகப் பிரிக்கக்கூடாது.” என்றும் அமைச்சருக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது என்றும் தெரியவந்துள்ளது















