LOADING

Type to search

இந்திய அரசியல்

அசாம் மாநில முதல்-அமைச்சராக ஹிமந்த பிஸ்வ சர்மா பதவியேற்பு

Share

கடந்த மாதம் 9-ந்தேதி, அசாம் சட்டசபை தேர்தல் ஒரே கட்ட மாக நடந்தது. அதில், மொத்தம் உள்ள 126 தொகுதிகளில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 102 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பா.ஜனதா மட்டும் 82 தொகுதிகளை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து, புதிய முதல்-அமைச்சரை தேர்ந்தெடுப்பதற்காக, நேற்று அசாம் தலைநகர் கவுகாத்தியில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. இதில் தற்போதைய முதல்-அமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா முதல்-அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திலும் அவர் தேர்வு செய்யப்பட்டார். பின்னர், ஹிமந்த பிஸ்வா சர்மா ஆளுனர் லட்சுமண் பிரசாத் ஆச்சாரியாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதத்தை அளித்தார்.

ஆளுனர் ஏற்றுக்கொண்டதால் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான புதிய அரசின் பதவியேற்பு விழா குவாஹாட்டியின் கானாபாரா பகுதியில் அமைந்துள்ள கால்நடை மருத்துவ மைதானத்தில் நடைபெற்றது. பிரம்மாண்டமான விழாவில், ஆளுனர் லட்சுமண் பிரசாத் ஆச்சார்யா, ஹிம்ந்த பிஸ்வ சர்மாவுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்களான அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, சர்பானந்த சோனோவால், பவித்ரா மார்கரிட்டா, பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்-அமைச்சர்கள் மற்றும் துணை முதல்-அமைச்சர்கள், பாஜக தலைவர் நிதின் நவீன் ஆகியோரும் இந்தப் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டனர். பதவியேற்பு விழாவில் அவரது குடும்பமான முதல்-அமைச்சரின் தாயார் மிருணாலினி தேவி, மனைவி ரினிகி புயான் சர்மா, மகன் நந்தில் பிஸ்வா சர்மா, மகள் சுகன்யா சர்மா ஆகியோரும் உடனிருந்தனர்.