LOADING

Type to search

உலக அரசியல்

இந்தியா – ஸ்லோவாக்கியா இடையே முக்கிய துறைகளில் ஒப்பந்தம் கையெழுத்தாகியது

Share

இந்தியா – ஸ்லோவாக்கியா பிரதமர்கள் முன்னிலையில் முக்கிய துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.  பிரதமர் மோடி ஒரு வார கால ஐரோப்பிய சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று அவர் சுலோவாகியா நாட்டின் பிரடிஸ்லவா நகருக்கு சென்றடைந்தார். அந்த நாட்டுக்கு இந்திய பிரதமர் ஒருவர் செல்வது இதுவே முதல்முறை ஆகும். சுலோவாகியா நாட்டின் பிரதமர் ராபர்ட் பிகோவுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இருதரப்பு உறவை விரிவான கூட்டாண்மை என்ற அந்தஸ்துக்கு தரம் உயர்த்த இருவரும் ஒப்புக்கொண்டனர். இருதரப்பு பொருளாதார உறவை மேலும் வலுப்படுத்துவதற்காக, இந்திய-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை விரைவில் அமலுக்கு கொண்டுவர இரு தலைவர்களும் சம்மதம் தெரிவித்தனர்.

பிரதமர் மோடி தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: எங்கள் உறவை விரிவான கூட்டாண்மை என்ற அந்தஸ்துக்கு உயர்த்த நாங்கள் முடிவு செய்துள்ளோம். உறவுக்கு புதிய இலக்கை அளிப்பதற்கான வழிவகைகளை ஆய்வு செய்தோம்.பல்வேறு வகையான எரிசக்தி ஆதாரங்களை திரட்டி, எரிசக்தி பாதுகாப்பை அதிகரிக்க எரிசக்தி துறையில் ஒத்துழைக்க முடிவு செய்தோம்.ஆட்டோமொபைல், ரெயில்வே, நவீன உற்பத்தி, பசுமை தொழில்நுட்பங்கள் ஆகிய துறைகளில் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளோம். இருநாட்டு மக்களுக்கும் பலன் அளிக்கும் முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளோம். இருநாட்டு பாதுகாப்பு தொழில்துறைகளுக்கு இடையே ஒத்துழைப்புக்கு புதிய உத்வேகம் அளிக்கும் விருப்ப கடிதம் இறுதி செய்யப்பட்டுள்ளது.உலக அரங்கில் இரு நாடுகளும் நெருங்கிய ஒத்துழைப்புடன் முன்னேறி வருகிறோம். அனைத்து பிரச்சினைகளையும் அமைதியான முறையில் தீர்க்க உறுதி பூண்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். பேச்சுவார்த்தையை தொடர்ந்து, இருநாட்டு பிரதமர்கள் முன்னிலையில், இந்தியா-சுலோவாகியா இடையே 11 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இடம்பெயர்வு, டிஜிட்டல் தொழில்நுட்பம், பாதுகாப்பு, உயர்கல்வி, குவாண்டம் தகவல் தொடர்பு உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க இந்த ஒப்பந்தங்கள் வகை செய்கின்றன