LOADING

Type to search

இந்திய அரசியல்

இரட்டைமலை சீனிவாசனார் பெரும்புகழ் போற்றுவோமென சீமான் கூறினார்

Share

இரட்டைமலை சீனிவாசனார் பெரும்புகழ் போற்றுவோமென சீமான் கூறினார். இரட்டைமலை சீனிவாசனின் நினைவு நாளையொட்டி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; “தமிழ்நாட்டில் சாதிய அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்ட மக்களின் இழிவு நீங்கவும், சமவுரிமை பெற்றுக் கண்ணியமாக வாழவும் பாடுபட்டதோடு, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும், விடுதலைக்காகவும் தன் வாழ்நாள் முழுவதும் போராடிய சமூகநீதிப்போராளி..! “எந்தச் சொல் உன்மீது இழிச்சொல்லாகச் சுமத்தப்படுகிறதோ, அந்தச் சொல்லை நீ எழுச்சிச் சொல்லாக மாற்றாத வரை உனக்கு விடுதலை இல்லை” என்று முழங்கிய புரட்சியாளர்! வர்ணாசிரம கோட்பாட்டிற்கு எதிராக ஒரு மாற்றுக் கோட்பாட்டை நீ உருவாக்கிக்கொள்ளாத வரை உனக்கு விடுதலை இல்லை என்று கற்பித்த பெருந்தகை..! இலண்டன் வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டு ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்குக் குரல்கொடுத்த போராளி..! சாதியக் கொடுமைகளுக்கு எதிராக சட்டமன்றத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்களை முன்மொழிந்து அவை நிறைவேற காரணமான சமூகச் சீர்திருத்தவாதி..! அண்ணல் காந்தியடிகளுக்கு தமிழ்ப் படிக்கவும், தமிழில் கையெழுத்திடவும் கற்றுக்கொடுத்த தமிழறிஞர்..! தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் நினைவு நாளில் சமத்துவச் சமுதாயம் உருவாக்கிட வேண்டும் என்ற அவருடைய உயரிய கனவினை நிறைவேற்ற தொடர்ந்து அயராது பாடுபடுவோம் என்ற உள உறுதியோடு, அவருடைய பேரப்பிள்ளைகளாகிய நாம் பெருமிதத்தோடும், திமிரோடும் நம்முடைய புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்! நம்முடைய தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் பெரும்புகழ் போற்றுவோம்!” என கூறினார்.