LOADING

Type to search

உலக அரசியல்

ஈரானுக்கு ஆயுதங்கள் விற்க கூடாதென சீனா, ரஷியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்

Share

 ஈரானுக்கு ஆயுதங்களை வழங்கவோ, விற்கவோ கூடாது என்று சீனா மற்றும் ரஷியாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக ட்ரூத் சமூக தளத்தில் டிரம்ப் வெளியிட்ட பதிவில், “ஈரானுக்கு ஆயுதங்கள் வழங்கப்படவில்லை என்று சீன அதிபர் ஷி ஜின்பிங்கும், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும் எனக்கு உறுதியளித்துள்ளனர். அவர்களின் வார்த்தையை நான் நம்புகிறேன். ஈரானுக்கு சீனா அல்லது ரஷியா ஆயுதங்களை வழங்கினால், அது அந்த நாடுகளின் நலனுக்கு உகந்ததாக இருக்காது. அத்தகைய நடவடிக்கை அவர்களுக்கே பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்” என்று தெரிவித்துள்ளார். அமெரிக்கா-ஈரான் இடையேயான பதற்றம் நீடித்து வரும் நிலையில், ரஷியா மற்றும் சீனா மறைமுகமாக ஈரானுக்கு ராணுவ உதவி அளிக்கக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் பின்னணியில்தான் டிரம்ப் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் மோதல் உச்சம் அடைந்துள்ளது. இதன் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இடைக்கால போர் நிறுத்த உடன்பாட்டை மீறி ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய்க் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதால், அந்நாட்டின் மீது அமெரிக்க ராணுவம் கடந்த சில வாரங்களாக கடும் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. ஈரானின் உள்கட்டமைப்புகளை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்படுகிறது. அமெரிக்காவுக்கு பதிலடியாக ஈரானும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் உச்சம் தொட்டுள்ளது.