LOADING

Type to search

இந்திய அரசியல்

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘நிபுன்’ மீட்புக் கப்பல் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது

Share

உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட 2-வது ஆழ்கடல் மூழ்குதல் ஆதரவு மற்றும் மீட்பு கப்பலான ‘ஐ.என்.எஸ். நிபுன்’ இந்திய கடற்படையில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டது. மும்பையில் உள்ள கடற்படை தளத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், கடற்படை தலைவர் அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் முன்னிலையில் இந்த கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. மத்திய அரசின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின்கீழ், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனம் இந்த கப்பலை முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் தயாரித்துள்ளது. கடந்த ஜூலை 30-ம் தேதி அனைத்து கட்ட சோதனைகளும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. ‘நிஸ்தார்’ வகையை சேர்ந்த இந்த ‘ஐ.என்.எஸ். நிபுன்’ கப்பல், ஆழ்கடலில் மூழ்கி செய்யும் சோதனைகள் மற்றும் நீருக்கடியில் நடக்கும் மிக சிக்கலான மீட்பு பணிகளை மேற்கொள்ளும் திறன் கொண்டது. குறிப்பாக, கடலுக்கு அடியில் நீர்மூழ்கி கப்பல்கள் ஏதேனும் விபத்தில் சிக்கினால், அதில் உள்ள வீரர்களை உடனடியாக மீட்கும் தாய்க்கப்பலாக இது செயல்படும். கடலின் ஆழமான பகுதிக்கு சென்று தேடுதல் வேட்டை நடத்த ஏதுவாக, தானியங்கி ரோபோக்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன. ஆபத்தான நிலையில் மீட்கப்படும் வீரர்களுக்குக் கப்பலிலேயே அவசர சிகிச்சை அளிக்க ஏதுவாக 8 படுக்கைகள் கொண்ட அதிநவீன மருத்துவமனை மற்றும் ஆபரேஷன் தியேட்டர் வசதிகள் உள்ளன. அவசர தேவைகளுக்காக ஹெலிகாப்டர் வந்து இறங்குவதற்கான பிரத்யேக தளமும் இதில் அமைக்கப்பட்டுள்ளது.