கொலம்பியா: ஓடும் பேருந்தில் குண்டுவெடிப்பு தாக்குதல் – 13 பேர் உயிரிழப்பு
Share
தென் அமெரிக்காவில் உள்ள நாடு கொலம்பியா. இங்கு போதைப்பொருள் கடத்தல் கும்பல் மற்றும் சட்டவிரோத ஆயுதக் குழுக்களின் அட்டூழியம் அதிகம் காணப்படுகிறது. இந்நிலையில் தென்மேற்கு கொலம்பியாவில் காஜிபியோ பகுதியில் உள்ள பான்-அமெரிக்கன் நெடுஞ்சாலையில் பயணித்த பயணிகள் பேருந்து ஒன்றில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்துள்ளது. பேருந்து பயணித்துக்கொண்டிருந்தபோது அதில் பொருத்தப்பட்டிருந்த வெடிகுண்டு வெடிக்கச்செய்யப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 5 குழந்தைகள் உட்பட 38 பேர் படுகாயமடைந்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களில் மட்டும் காஜிபியோ பகுதியில் 26க்கும் மேற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளன. ஆயுதக் கும்பல்கள் காவல் நிலையங்கள் மற்றும் ரேடார் மையங்களை இலக்கு வைத்து தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. இந்த பேருந்து தாக்குதலுக்கு நாட்டின் தேடப்படும் மிக முக்கியமான குற்றவாளியான இவான் மோர்டிஸ்கோவின் கும்பல் மற்றும் ஜெய்ம் மார்டினெஸ் கும்பல் தான் காரணம் என கொலம்பிய ராணுவ தளபதி ஜெனரல் ஹியூகோ லோபஸ் தெரிவித்துள்ளார். கொலம்பிய அதிபர் குஸ்தாவோ பெட்ரோ இந்தத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.















