தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள் – எடப்பாடி பழனிசாமி
Share
நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியானது முதல் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. ஆட்சி அமைக்க அழைக்குமாறு 3 முறை ஆளுனரை சந்தித்து த.வெ.க. தலைவர் விஜய் வலியுறுத்தியும், ஆளுனர் அழைப்பு விடுக்காதது பெரும் கண்டனத்தை ஏற்படுத்தி உள்ளது. இது ஒருபுறம் இருக்க பெரும்பான்மையை நிரூபிக்க த.வெ.க. முயன்று வருகிறது. அதன்பலனாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தங்களது ஆதரவை இன்று மாலை 4 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வந்தார். இதனால் அரசியல் வட்டாரம் பரபரப்பு நிலவி வந்தது. இந்த நிலையில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முடிந்த உடன் அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நடைபெற்று முடிந்த 17வது தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.















