பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று சைப்ரஸ் அதிபர் இந்தியா வருகை
Share
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று சைப்ரஸ் நாட்டின் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடுலைட்ஸ் 4 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார்.
அதிபர்யாக பொறுப்பேற்ற பிறகு நிகோஸ் கிறிஸ்டோடுலைட்ஸ் இந்தியாவிற்கு மேற்கொள்ளும் முதலாவது வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம் இதுவாகும். அவருடன் சைப்ரஸ் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர், போக்குவரத்துத்துறை அமைச்சர், உயர் அதிகாரிகள் மற்றும் முக்கியப் தொழில் அதிபர்கள் அடங்கிய உயர்மட்டக் குழுவினரும் வந்துள்ளனர். சைப்ரஸ் அதிபர் இன்று மதியம் மும்பை வந்தடைந்தார். அவருக்கு இந்திய முறைப்படி பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிறகு, 2008 பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவாக தாஜ் மஹால் பேலஸ் ஹோட்டலில் உள்ள நினைவுச் சின்னத்திற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அந்த தாக்குதலில் சைப்ரஸ் நாட்டின் ஒரு குடிமகனும் பலியானது குறிப்பிடத்தக்கது.
நாளை மும்பையில் நடைபெறும் இந்தியா- சைப்ரஸ் வர்த்தக மாநாட்டில் பங்கேற்று, மும்பை பங்குச்சந்தையின் வர்த்தக நிறைவு மணியை ஒலித்துவிட்டு டில்லி புறப்படுகிறார். நாளை பயணமாக டில்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அதன் பின்னர் மோடி வழங்கும் சிறப்பு மதிய உணவு விருந்தை முடித்து விட்டு, மாலையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவைச் சந்தித்துப் பேசுகிறார். பிறகு அதிபர் மாளிகையில் சிறப்பான இரவு விருந்தும் அளிக்கப்பட இருக்கிறது. இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கிடையே பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடுகள், கல்வி, கலாசாரம், செயற்கை நுண்ணறிவு, ஃபின்டெக், மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் குறித்து முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளனர். மேலும் இந்தியா- ஐரோப்பிய ஒன்றிய வர்த்தகத்திற்குப் பெரும் பலம் சேர்க்கும் என்றும் குறிப்பாக, இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமானச் சேவையை தொடங்குவது குறித்தும் இந்த மாநாட்டில் முடிவெடுக்க வாய்ப்புள்ளது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவொரு இந்தியப் பிரதமரும் சைப்ரஸ் நாட்டிற்குச் செல்லாத நிலையில், கடந்த ஆண்டு (ஜூன் 15-16, 2025) பிரதமர் நரேந்திர மோடி அங்கு மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுப்பயணம் இரு நாட்டு உறவில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. அந்தப் பயணத்தின் போதுதான், சைப்ரஸ் அதிபர்யை இந்தியாவிற்கு வருமாறு பிரதமர் மோடி நேரில் அழைப்பு விடுத்திருந்தார். மேலும், இரு நாடுகளின் வளர்ச்சிக்காக 2025 முதல் 2029 வரையிலான 5 ஆண்டுகால “கூட்டு அதிரடித் திட்டம்”அப்போது கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.
















