போர் நிறுத்தம் எதிரொலி: ஈரானில் விமானப்போக்குவரத்து மீண்டும் தொடக்கம்
Share
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கடந்த பிப்ரவரி 28-ந்தேதி திடீரென போர் தொடுத்தன. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்தது. இதனால் இரு தரப்புக்கும் இடையே சுமார் 40 நாட்கள் கடுமையான போர் நீடித்தது. பின்னர் கடந்த 7-ந்தேதி நள்ளிரவு திடீரென இரு தரப்பும் 2 வார காலத்துக்கு தற்காலிக போர் நிறுத்தம் அறிவித்தன. பின்னர் அது காலவரையின்றி நீட்டிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக போர் தொடங்கியதுமே ஈரான் தனது வான்பரப்பை மூடியது. அத்துடன் விமானப் போக்குவரத்தையும் ரத்து செய்தது. பின்னர் 2 வாரகால போர் நிறுத்தம் அமலானதை தொடர்ந்து இந்த மாத தொடக்கத்தில் தனது வான் பரப்பை பாதியளவுக்கு திறந்தது. தற்போது காலவரையற்ற போர் நிறுத்தம் அமலாகி இருப்பதால் மீண்டும் விமானப்போக்குவரத்தையும் நேற்று முதல் தொடங்கியது. அதன்படி தலைநகர் டெஹ்ரானில் உள்ள இமாம் கொமேனி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பல நாடுகளுக்கு விமானங்கள் புறப்பட்டு சென்றன. அதன்படி துருக்கியின் இஸ்தான் புல், ஓமனின் மஸ்கட் மற்றும் சவுதி அரேபியாவின் மதீனா நகரங்களுக்கு விமானங்கள் புறப்பட்டு சென்றதாக ஈரானின் அரசு தொலைக்காட்சி அறிவித்தது. ஈரானில் மீண்டும் விமானப் போக்குவரத்து தொடங்கியதால் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணிகளிடையே மகிழ்ச்சி ஏற்பட்டு உள்ளது.















