LOADING

Type to search

இந்திய அரசியல்

விஜய் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – பெ.சண்முகம்

Share

சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதிகளில் போட்டியிடுகிறார். இந்நிலையில் 2-வது கட்டமாக நேற்று விஜய் தான் போட்டியிடும் திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட சில இடங்களில் ‘ரோடு ஷோ’ நடத்தி ஆதரவு திரட்டினார். இதையடுத்து வயர்லஸ் சாலையில் உள்ள அந்தோணியார் கோவில் அருகில் வந்ததும் பிரசார வாகனம் நிறுத்தப்பட்டது. வாகனத்தில் இருந்து இறங்கிய விஜய் அந்த ஆலய வாசலுக்கு வந்தார். அங்கு பங்குத்தந்தை அவரை வரவேற்றார். இதனை தொடர்ந்து ஆலயத்திற்குள் சென்ற விஜய் மண்டியிட்டு பிரார்த்தனை செய்தார். பின்னர் விஜய் மீண்டும் பிரசார வாகனத்தில் ஏறினார். வயர் லஸ்சாலை திருப்பம் அருகில் உள்ள ஒரு மசூதி அருகில் வாகனம் சென்றதும், அதில் இருந்து இறங்கிய விஜய் மசூதிக்கு நடந்து சென்றார். மசூதி வாசலில் அவருக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து அங்கு வழிபாடு செய்துவிட்டு மீண்டும் பிரசார வாகனத்தில் ஏறினார். அதனை தொடர்ந்து கோவிலுக்குள் சென்ற விஜய்க்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. சிறப்பு பூஜை நடத்தி தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது விஜய் அம்மன் சன்னதிக்கு நேர் எதிரே நெடுஞ்சாண் கிடையாக தரையில் படுத்து அம்மனை வணங்கினார். அங்கு அவருக்கு மாலை அணிவித்து தேங்காய் பழத்துடன் பிரசாத தட்டு வழங்கப்பட்டது. சாமி தரிசனம் செய்து முடித்த தும் கோவில் பூசாரிகள் குடும்பத்தினர் விஜய்யுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் மீது தேர்தல் ஆணையம் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மத வழிபாட்டு இடங்களுக்குள் (கோயில், தேவாலயங்கள், மசூதி) கட்சி அடையாள சின்னத்துடன் சென்று வாக்கு கேட்கக்கூடாது என்பது தேர்தல் நடத்தை விதி. த.வெ.க. தலைவர் விஜய் இதை மீறி இருக்கிறார். எனவே, அவர் மீது தேர்தல் ஆணையம் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.