LOADING

Type to search

இந்திய அரசியல்

வி.சி.க.வை தொடர்ந்து த.வெ.க.வுக்கு ஆதரவு வழங்கியது ஐ.யூஎம்.எல்.

Share

தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றியது. த.வெ.க.வுக்கு காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்பதை சுட்டிக்காட்டி, த.வெ.க.வை ஆட்சியமைக்க தமிழக பொறுப்பு ஆளுனர் அர்லேகர் அழைப்பு விடுக்கவில்லை. இதையடுத்து, பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை திரட்டும் முயற்சியில் த.வெ.க. ஈடுபட்டது. தங்களுக்கு ஆதரவு வழங்குமாறு தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள வி.சி.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்(ஐ.யூ.எம்.எல்.) ஆகிய கட்சிகளுக்கு த.வெ.க. அழைப்பு விடுத்தது. த.வெ.க.வின் அழைப்பை ஏற்று, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய இரு கட்சிகளும் விஜய்க்கு நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்பதாக அறிவித்தன. அதே சமயம், ஐ.யூ.எம்.எல். கட்சி தி.மு.க. கூட்டணியிலேயே தொடர்வதாகவும் த.வெ.க.வுக்கு ஆதரவு கொடுக்கவில்லை என்றும் அறிவித்தது. பெரும்பான்மைக்கு இன்னும் 2 இடங்கள் தேவை என்ற நிலையில், த.வெ.க. தரப்பில் இருந்து வி.சி.க. தலைவர் திருமாவளவனிடம் ஆதரவு கோரப்பட்டது. வி.சி.க. தலைவர் திருமாவளவன், தங்கள் கட்சி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவை அறிவிப்பதாக கூறியிருந்தார். இன்று காலை வி.சி.க.வின் நிலைப்பாடு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வி.சி.க. தரப்பில் இருந்து மாலை 4 மணியளவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, த.வெ.க. மூத்த நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, இன்று வி.சி.க. தலைவர் திருமாவளவனை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது த.வெ.க.வுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கடிதம் வழங்கப்பட்டது. இதன் மூலம் த.வெ.க. தலைவர் விஜய்க்கு பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவு கிடைத்துள்ளது. இந்த நிலையில், வி.சி.க.வை தொடர்ந்து தற்போது ஐ.யூ.எம்.எல். கட்சியும் த.வெ.க.வுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது. ஐ.யூ.எம்.எல். கட்சியின் ஆதரவு கடிதத்தை த.வெ.க. நிர்வாகிகள் செங்கோட்டையன், அருண்குமார் உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர். இதன் மூலம் த.வெ.க.வின் ஆதரவு எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து த.வெ.க. தலைவர் விஜய், ஆளுனரை சந்தித்து ஆதரவு எண்ணிக்கையை காண்பித்து ஆட்சியமைப்பதற்கான உரிமையை கோர உள்ளார். ஆளுனர் ஆட்சியமைக்க அழைக்கும் பட்சத்தில் விஜய் தமிழகத்தின் முதல்-அமைச்சராக பதவியேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.