LOADING

Type to search

இலங்கை அரசியல்

வறுமையின் காரணத்தால் மாணவர்கள் கல்வியை விட்டு விலகுகின்றார்கள் – பேராசிரியர் வேல்நம்பி ஆதங்கம்!

Share

பு.கஜிந்தன்

இன்றைக்கு வறுமையின் காரணமாக பல மாணவர்கள் தங்களுடைய படிப்பை கைவிட்டு விடுகின்றார்கள். சாதாரணமான பாடசாலைகளில் மட்டுமல்ல, பல்கலைக்கழகங்களில் கூட கல்வியை தொடர முடியாமல் இடப்படுகின்ற மாணவர்கள் ஏராளமாக இருக்கின்றார்கள் என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உயர் படிப்புகள் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் தி.வேல்நம்பி தெரிவித்துள்ளார்.

வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் அதிதியாக கலந்து கொண்டு பிரதம விருந்தினர் உரை ஆற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் மற்றவர்களிடம் இருந்து உதவியை பெறுவது அவ்வளவு நல்லது இல்லை என்றாலும் கூட கல்வி கற்க வேண்டும் என்பதற்காக ஒருவரது உதவியை பெறுவது என்பது எந்த விதத்திலும் தாழ்வானது கிடையாது. மாறாக கல்வி கற்பதற்கு வறுமையினால் இடர்ப்படுகின்ற மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உதவி செய்வது என்பது இந்த உலகத்திலே இருக்கின்ற உன்னதமான கருமங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

ஆகவே வழியில்லாதவர்கள் உங்களுடைய கல்விக்கு கை கொடுக்கக் கூடியவர்களை தேடி கண்டுபிடிப்பதும், எங்கெல்லாம் தேவையில்லாமல் பணத்தை எறிகின்றார்களோ அவர்களெல்லாம் கண் வைக்க வேண்டிய இடம் இந்த கற்க முடியாமல் இடர்ப்படுகின்ற பிள்ளைகள் என்பதையும் ஞாபகம் வைத்துக் கொண்டால் எமது சமூகத்தின் உரிய இடத்திற்கு அந்த உதவி சென்று சேரும்.

அந்தக் கல்வியினால் எமது சமூகம் நிமிர்ந்து நிற்கும். நல்ல ஆளுமைகளை நாங்கள் கண்டு கொள்ளக் கூடியதாக இருக்கும்.

பிச்சை புகினும் கற்கை நன்றே என்பதற்கு சில அறிஞர்கள் கூறியுள்ள விளக்கம் “நல்ல விடயங்கள பெற்றுக் கொள்ள வேண்டுமாக இருந்தால் அவரிடம் சென்று கெஞ்சி மன்றாடி, அவருடைய காலில் விழுந்தாவது அதனைப் பெற்றுக் கொள்” என்பதுதான் அங்கு சொல்லப்படுகின்றது. இதிலே எந்த தாழ்வு மனப்பாங்கும் எமக்கு இருக்க வேண்டிய தேவை இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.