யாழ்ப்பாணத்தில் பாம்பு கடிக்கு இலக்கான இளைஞன் உயிரிழப்பு!
Share
யாழ்ப்பாணம் புத்தூர் கிராமத்தில் பாம்பு கடிக்கு இலக்கான இளைஞர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். புத்தூர் மேற்கு, புத்தூர் பகுதியைச் சேர்ந்த செல்வச்சந்திரன் மிரோஜன் (வயது 27) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த இளைஞர் செவ்வாய்கிழமை 29ம் திகதி அன்றிரவு அயலில் உள்ள ஆலயத்தில் இசை நிகழ்வை பார்வையிட சென்றுள்ளார். இசை நிகழ்விற்கு சென்ற மகன் திரும்பி வராத காரணத்தால் தாயார் 30ம் திகதி அன்று காலை 5 மணியளவில் தேடிச் சென்றுள்ளார். இதன்போது குறித்த இளைஞர் வீட்டு ஒழுங்கைக்குள் அசைவற்று காணப்பட்டார்.
உடனே புத்தூர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பின்னர் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். பாம்பு தீண்டியதால் மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.




















