LOADING

Type to search

இலங்கை அரசியல்

வரலாறு தெரியாத ஒரு நடிகருக்கு எமது அமைச்சர் “கச்சதீவு எங்களுடையது இதனை விட்டுத் தர முடியாது” என்று கூறவேண்டிய அவசியம் இல்லை.

Share

வரலாறு தெரியாத ஒரு நடிகருக்கு எமது அமைச்சர் “கச்சதீவு எங்களுடையது இதனை விட்டுத் தர முடியாது” என்று கூறவேண்டிய தேவை இல்லை. கச்சதீவை மீட்க முயற்சிக்கும் இந்திய மத்திய அரசுக்கும் தமிழக வெற்றி கழகத்திற்கும், சீனாவிடம் பறிபோகும் தமது நிலத்தினை மீட்பதற்கு துப்பிருக்கிறதா என அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தலைவர் என்.வி.சுப்பிரமணியம் கேள்வி எழுப்பினார்.

28ம் திகதி வியாழக்கிழமை அன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார் அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டில் அந்த கட்சியின் தலைவரான கத்துக்குட்டி அரசியல்வாதி விஜய், கச்சதீவு இந்தியாவிற்கு சொந்தம் என கூறியுள்ளார். இந்த விடயமானது கவலையாக இருந்தாலும் இது காலத்திற்கு காலம் அரசியல் இலாபம் கருதி பெரிய பெரிய காட்சிகளும் தமிழ்நாட்டு மீனவ மக்களை ஏமாற்றுவதற்கும் அவர்களுடைய வாக்குகளை பெறுவதற்கும் செய்யப்படுகின்ற நாடகம்.

விஜய், இலங்கை – இந்தியாவிடையே செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் தொடர்பான கருத்துக்களை கேட்டு அறியாமல் கச்சத்தீவு இந்தியாவுக்கு சொந்தமென சொல்லியிருக்கின்றமை தமிழ்நாட்டு மீனவ மக்களை ஏமாற்றுகின்ற செயற்பாடு.

பழம்பெரும் அரசியல் தலைவர்களுக்கும் தெரியும் கச்சதீவை இலங்கையிடமிருந்து இருந்து மீட்க முடியாது. கச்சதீவு விடயத்தினை அரசியலாக்கி தமிழக மீனவர்களுடைய வாக்குகளை பெற்றுக் கொள்வதே அவர்களுடைய நோக்கம். அதைத் தவிர இதில் வேறு எதுவும் கிடையாது.

இந்தியாவினுடைய ஒரு பக்கத்தை தான்தோன்றித்தனமாக சீனா கைப்பற்றி வருகின்றது. அதில் ஒரு இஞ்சி அளவு நிலத்தை கூட பறிப்பதற்கு துப்பில்லாத இந்திய அரசாங்கமும், தமிழக வெற்றி கழகமும் இலங்கையில் உள்ள கச்சதீவு தமக்கு சொந்தம் என்றும் அதனை திருப்பிப் பெறுவோம் என்றும் கூறுவது ஒரு வேடிக்கையான விடயம்.

வரலாற்றினை விஜய் படித்திருக்க வேண்டும். அவருக்கு நான் சொல்லுகின்ற ஒரு புத்திமதி, கச்சதீவில் இருந்து இராமேஸ்வரம் ஏறத்தாழ 30 மைல் தொலைவில் உள்ளது. நெடுந்தீவில் இருந்து தொண்டி 30 மைல் தொலைவில் உள்ளது. கச்சதீவில் இருந்து கோதண்ட ரமர் கோவில் 30 மைல் தொலைவில் உள்ளது. ஆனால் தலைமன்னாரில் இருந்து 18 மைல் தொலைவிலே தனுஷ்கோடி இருக்கின்றது. ஏன் தனுஷ்கோடியை நாங்கள் எமது நாட்டினுடைய பகுதி என்று கூறவில்லை?

தமிழ்நாட்டு மீனவர்களுக்கும் எமக்கும் இடையே நீண்ட காலமாக சட்டவிரோத இழுவைமடி தொழிலே ஒரு பிரச்சனை இருக்கிறது. அதற்கு கச்சதீவு பரிகாரமாக முடியாது. இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினையை நிரந்தரமாக தீர்ப்பதாக இருந்தால் சட்டவிரோத இழுவைமடி தொழிலை நீக்க வேண்டும்.

முடிந்தால் மத்திய அரசுடன் விஜய் பேசி, அவர்கள் மூலமாக எங்களுடன் பேச்சுவார்த்தைக்கு வந்து எமது நாட்டின் ஒரு பகுதியான கச்சதீவை தருமாறு கேட்கலாமே தவிர மீட்க முடியாது. அரசியலுக்காக விஜய் கச்சதீவு பிரச்சினையை கையில் எடுத்திருப்பது கண்டிக்கத்தக்க விடயம் என அவர் மேலும் தெரிவித்தார்.