வெளிநாட்டவருக்கு கடப்பிதழ் வழங்கும் விவகாரம் – அமெரிக்கா கடும் கெடுபிடி
Share
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குடியேற்ற விதிகள், விசா விதிகளில் கடும் கெடுபிடிகளை விதித்து வருகிறார். அமெரிக்காவில் வேலைக்குச் செல்வதற்கு இந்தியர்கள் அதிகமாக நம்பியிருக்கும் எச்1-பி விசாவுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே அமெரிக்கா செல்ல எச்1-பி விசாவுக்கு விண்ணப்பிப்போரில் நீரிழிவு நோய், உடல் பருமன் போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு விசா வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதய நோய், சுவாச நோய், புற்றுநோய், நீரிழிவு, நரம்பியல் நோய்கள், மனநலம் சார்ந்த கோளாறுகள் உள்ளவர்களின் விசாக்களை நிராகரிக்குமாறு அமெரிக்காவில் உள்ள தூதரகங்களுக்கு டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
உடல்நலக் குறைவு உள்ளவர்களால் அமெரிக்காவுக்கு நிதிச்சுமை ஏற்படலாம் என்பதாலும், இந்த நோய்களுக்கு சிகிச்சையளிக்க அதிக பணம் தேவைப்படும் என்பதாலும் விண்ணப்பதாரரின் ஆரோக்கியத்தைக் கவனத்தில்கொண்டு விசாவை ஏற்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. ஆஸ்துமா, தூக்கத்தில் மூச்சுத்திணறல், உயர் ரத்த அழுத்தம், உடல்பருமன் போன்ற வளர்சிதை மாற்றக் கோளாறுகளையும் தூதரக அதிகாரிகள் கவனத்தில்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.விண்ணப்பதாரரின் குடும்பத்தினரின் உடல்நலத்தையும் சோதிக்க வேண்டும், குடும்பத்தினருக்கு பிரச்னை இருந்தால் அவர்களது பராமரிப்புக்கான செலவை செய்ய முடியுமா? விண்ணப்பதாரர் வேலையைத் தொடர முடியுமா? ஆகியவற்றை சோதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது




















