பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் சாய் பல்லவி
Share
1916ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி மதுரையில் பிறந்த எம்.எஸ். சுப்புலட்சுமி, கர்நாடக இசையின் தெய்வீக குரலாக போற்றப்படுகிறார். 10-வது வயதில் எச்.எம்.வி நிறுவனத்திற்காக பாடி சாதனை படைத்த அவர், பின்னர் சினிமாவிலும் தடம் பதித்தார். அவர் நடித்த முதல் படம் சேவாசதன். தொடர்ந்து சில படங்களில் நடித்த அவர், மீரா திரைப்படத்தின் மூலம் நாடு முழுவதும் பெரும் புகழைப் பெற்றார். கர்நாடக இசையின் ராணியாக திகழ்ந்த அவர், 1954ல் பத்மபூஷன், 1968ல் சங்கீத கலாநிதி (இந்த விருதைப் பெற்ற முதல் பெண்) மற்றும் 1998ல் இந்தியாவின் உயரிய விருதான பாரதரத்னா உள்ளிட்ட பல விருதுகளை பெற்றார். 2004ம் ஆண்டு 88-வது வயதில் அவர் மறைந்தார். இந்நிலையில், அவரது வாழ்க்கை வரலாறு தற்போது சினிமாவாக உருவாகிறது. ஜெர்ஸி படத்தை இயக்கிய கவுதம் தின்னூரி இந்த பயோபிக்கை இயக்குகிறார். முதலில் திரிஷா, நயன்தாரா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் பரிசீலனையில் இருந்த நிலையில், இறுதியாக சாய் பல்லவி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தக் கதாபாத்திரத்திற்காக அவர் கர்நாடக இசையை தீவிரமாகக் கற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




















