‘தடயம்’ தொடரின் முன்னோட்டம் வருகிற 27-ந்தேதி ஓ.டி.டி.யில் வெளியீடு
Share
தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளுக்கும், சமூகப் பார்வை கொண்ட நடிப்புக்கும் பெயர் பெற்றவர் சமுத்திரகனி. இவர் இயக்கி நடித்த ‘விநோதய சித்தம்’ படம் ஓ.டி.டி. தளமான ஜீ5-ல் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது நவீன் குமார் பழனிவேல் இயக்கத்தில் அஜய் கிருஷ்ணா தயாரிப்பில் சமுத்திர கனி நடிப்பில் உருவாகி உள்ள தொடர் ‘தடயம்’. இந்த தொடரில் நடிகை ஷிவதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘தடயம்’ தொடர் 1999-ம் ஆண்டில் தமிழ்நாடு – ஆந்திரப் பிரதேச எல்லைப் பகுதிகளில் நடைபெற்ற அச்சுறுத்தும் சம்பவங்களை மையமாகக் கொண்டது. நிஜ வாழ்க்கையில் நடந்த பயங்கரமான தொடர் கொலைகளை மீண்டும் நினைவூட்டி பார்வையாளர்களுக்கு திகிலூட்டும் ஒரு புதிய அனுபவத்தை தர உள்ளது. இந்த நிலையில், ‘தடயம்’ தொடரின் முன்னோட்டம் தற்போது வெளியாகி உள்ளது. கூர்மையான புத்திசாலித்தானம் கொண்ட காவல் அதிகாரியான சமுத்திரகனி, குற்றவாளிகளையும், கொலைகளுக்கு பின்னால் இருக்கும் காரணங்களையும் கண்டறிகிறார். அதிரடி க்ரைம் த்ரில்லராக உருவாகி உள்ள திகில் நிறைந்த ‘தடயம்’ தொடரை வருகிற 27-ந்தேதி முதல் ஜீ5 ஓ.டி.டி. தளத்தில் கண்டு மகிழலாம்.




















