தூத்துக்குடி மாணவியின் பெற்றோரை தொடர்புகொண்டு ஆறுதல் கூறிய எடப்பாடி பழனிசாமி
Share
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அடுத்த குளத்தூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயது பிளஸ் 2 மாணவி கடந்த 10ம் தேதி இரவு இயற்கை உபாதை கழிக்க கிராமத்தில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் மாணவி வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த பெற்றோர், உறவினர்கள் இரவு முழுவதும் மாணவியை தேடியுள்ளனர். மேலும், மாணவி மாயமானது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளனர். இதனிடையே, கிராமத்திற்கு அருகே உள்ள காட்டுப்பகுதியில் மாணவி 11ம் தேதி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது ஆடைகளும் களைந்து கிழிந்த நிலையில் இருந்தன. மாணவியின் கழுத்தை துண்டால் இறுக்கியதற்கான தடயங்களும் இருந்தன. இரவில் இயற்கை உபாதை கழிக்க சென்ற மாணவி மர்ம நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த குற்ற செயலில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் சந்தேகத்திற்கு இடமான 5 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த 5 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. ஆனாலும், இந்த வழக்கில் குற்றவாளிகள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்நிலையில், கொல்லப்பட்ட தூத்துக்குடி மாணவியின் பெற்றோரை செல்போனில் தொடர்புகொண்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் தெரிவித்துள்ளார். கொல்லப்பட்ட மாணவியின் தாயாரிடம் செல்போனில் பேசிய எடப்பாடி பழனிசாமி, இது நெஞ்சை பதறவைக்கும் சம்பவம். இழந்தவர்களுக்குதான் அந்த கஷ்டம் தெரியும். சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது இந்த திமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கவில்லை. அதிமுக ஆட்சி வந்தவுடன் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.




















