LOADING

Type to search

உலக அரசியல்

ஈரானின் புதிய பாதுகாப்பு தலைவராக முகமது பக்கீர் அறிவிப்பு

Share

ஈரானின் உச்சபட்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவரான அலி லரிஜானி இஸ்ரேல் தாக்குதலில் பலியான நிலையில், அவருக்கு பதிலாக புதிய பாதுகாப்பு தலைவராக முகமது பக்கீர் ஜல்காதிர் அறிவிக்கப்பட்டு உள்ளார். இதனை ஈரான் அதிபர் அலுவலகத்திற்கான தொலைதொடர்பு மற்றும் தகவல் துறையின் துணை தலைவரான சையது மெஹ்தி தபதாபாய் இன்று அறிவித்து உள்ளார். ஈரானின் ராணுவம், பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு அமைப்புகளில் பல தசாப்தங்களாக முகமது அனுபவம் வாய்ந்தவராக உள்ளார். அதனால், முக்கிய தருணத்தில் இந்த பதவிக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என ஈரான் ஊடகம் தெரிவிக்கின்றது. ஈரானின் புதிய உச்சபட்ச தலைவராக மொஜ்தபா காமேனி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அவருடைய தேர்வாகவும், அதிபரின் தேர்வாகவும் முகமது பக்கீர் உள்ளார். லரிஜானி, கடந்த 2025-ம் ஆண்டு ஆகஸ்டில் இந்த பதவியில் அமர்த்தப்பட்ட நிலையில், கடந்த வாரம் நடந்த தாக்குதலில் அவர் படுகொலை செய்யப்பட்டார்.

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் காமேனி மற்றும் அவருடைய வாரிசான மொஜ்தபா காமேனி ஆகியோருக்கு நெருங்கிய அதிகாரியாக செயல்பட்ட லரிஜானி நள்ளிரவில் இஸ்ரேல் பாதுகாப்பு படையால் நடத்தப்பட்ட தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து, கடந்த மாத இறுதியில் ஈரானில் வான்வழியாக தாக்குதல் நடத்தியது. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈரானில் பலியானார்கள். ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே, புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் தாக்குதலின் தொடக்கத்தில் கொல்லப்பட்டனர். இந்த மோதலில், ஈரானின் முக்கிய அதிகாரிகள் பலியாகி உள்ளனர். அவர்களில் லரிஜானியும் ஒருவர் ஆவார்.