இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி வாலிபர் மேயராக தேர்வு
Share
இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் துஷார்குமார் (வயது 23). இந்திய வம்சாவளியான இவர் இங்கிலாந்து நகரமான எல்ஸ்ட்ரீ மற்றும் போஹாம்வுட் நகரின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் இங்கிலாந்தின் மிக இளவயது இந்திய வம்சாவளி மேயர் என்ற வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார். தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த இவர், நகராட்சியின் வருடாந்திர விழாவில் முறைப்படி மேயராக பொறுப்பேற்றார். தனது 20-வது வயதில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட துஷார், வாக்கு மறுசீராய்வுக்குப் பிறகு ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று கவுன்சிலர் ஆனார். லண்டன் கிங்ஸ் கல்லூரியில் அரசியல் அறிவியல் பட்டதாரியான இவரது தாய் பர்வீன்ராணியும் துணை மேயராக இருந்தவர் ஆவார். மேயராக பொறுப்பேற்ற துஷார்குமார், இந்த வாய்ப்பு தனது வாழ்நாளின் பெரும் பாக்கியம் என்று கூறினார். மேலும் அவர் உள்ளூர் ஜனநாயகத்தில் இளைஞர்கள் மற்றும் புதிய தலைமுறையினர் அதிகளவில் பங்கேற்க ஊக்குவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
















