ஐஸ்லாந்து பிரதமருடன் பிரதமர் மோடி சந்திப்பு
Share
ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக நெதர்லாந்து, சுவீடன் மற்றும் நார்வே நாடுகளுக்கு பிரதமர் மோடி சென்றார். இதில், நெதர்லாந்துக்கான பயணத்தின் ஒரு பகுதியாக, இரு நாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டன. தொடர்ந்து, சுவீடன் நாட்டுக்கு அவர் புறப்பட்டார். இந்த பயணத்தில், சுவீடன் பிரதமர் உல்ப் கிறிஸ்டர்சன் மற்றும் பிற ஐரோப்பிய தலைவர்களையும், சுவீடனின் தலைமை செயலதிகாரிகளையும் சந்தித்து, வர்த்தகம், முதலீட்டை வலுப்படுத்துதல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஒத்துழைப்புடன் செயல்படுவது பற்றி பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். இதுதவிர செயற்கை நுண்ணறிவு, பசுமை போக்குவரத்து, நவீன உற்பத்தி உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஆலோசனைகளில் ஈடுபட்டார். சுவீடன் பயணம் நிறைவடைந்ததும், பிரதமர் மோடி நார்வே நாட்டுக்கு புறப்பட்டு சென்றார். அப்போது, நார்வேயின் உயரிய கவுரவம் என கூறப்படும் கிராண்ட் கிராஸ் ஆப் தி ராயல் நார்வீஜியன் ஆர்டர் ஆப் மெரிட் என்ற விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. நார்வே 5-ம் அரசர் ஹரால்டு இதனை வழங்கினார். இரு நாடுகளுக்கு இடையே புவிஅரசியல் மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் நோக்கிலான முக்கிய நடவடிக்கையாக பிரதமர் மோடியின் இந்த பயணம் பார்க்கப்படுகிறது. இதில், இந்திய-நார்டிக் 3-வது உச்சி மாநாடு இன்று ஆஸ்லோ நகரில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டை முன்னிட்டு, ஐஸ்லாந்து பிரதமர் கிறிஸ்டிரன் ஜோல் பிராஸ்டடொத்திர் உடன் பிரதமர் மோடி இருதரப்பு சந்திப்பு ஒன்றை நடத்தினார். இந்திய-நார்டிக் 3-வது உச்சி மாநாட்டில் நார்வே, டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளின் பிரதமர்கள் கலந்து கொள்கின்றனர். அவர்களுடன் பிரதமர் மோடியும் கூட்டத்தில் பங்கேற்கிறார். இதற்கு முன்னர் நார்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோர் உடன் ஆஸ்லோ நகரில் நடந்த பேச்சுவார்த்தையின் முடிவாக, இரு நாடுகளின் இருதரப்பு உறவானது, பசுமை மூலோபாய கூட்டாண்மை அளவுக்கு உயர்த்தப்பட்டது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். இந்த பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வ முறையில் அமைந்திருந்தது என்றும் தூய மற்றும் நீடித்த எரிசக்தி துறைகளில் ஒத்துழைப்புடன் செயல்படுவது, கூட்டத்தின் மிக பெரிய வெளிப்பாடாக அமைந்திருந்தது என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
















