“கரையூர் அ. மி. த. க. பாடசாலை அதிபரை மாற்ற வேண்டாம்” என யாழ் குடத்தனை வடக்கு மக்கள் போராட்டம்!
Share
பு.கஜிந்தன்
பாடசாலை அதிபரை மாற்ற வேண்டாம் என்று குடத்தனை வடக்கு மக்கள் போராட்டம் ஒன்றினை 17ம் திகதி அன்று முன்னெடுத்திருந்தனர்.
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, குடத்தனை கரையூர் அ. மி. த. க. பாடசாலையில் அதிபராக பணியாற்றிக் கொண்டிருந்தவரை சில நாட்களுக்கு முன்னர் கல்வி திணைக்களம் தற்காலிக இடமாற்றம் செய்திருந்தது.
இந் நிலையில் தற்காலிக இடமாற்றம் செய்யப்பட்டிருந்த அதிபரை மீண்டும் தமது பாடசாலைக்கு நியமிக்குமாறு கோரி அன்றைய தினம் 7. 45 மணியளவில் பெற்றோர்கள், நலன்விரும்பிகள், பழைய மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது “மாற்றாதே மாற்றாதே அதிபரை மாற்றாதே, அதிபரின் தற்காலிக இடமாற்றத்திற்கு காரணம் என்ன அதிகாரிகளே பதில் சொல்லுங்கள்” என கோசங்களை எழுப்பியிருந்தனர்.
போராட்டம் முடிவில் கல்வி பணிப்பாளருக்கு வழங்குவதற்கு மகஜர் ஒன்றும் தற்போதுள்ள பதில் அதிபரிடம் கையளிக்கப்பட்டது.
இதில் சுமார் 75க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கிராம மக்கள் நலம் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை குறித்த அதிபர் மீது அதிருப்தியுற்ற பெற்றோர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் குறித்த அதிபரை மாற்றம் வேண்டும் என்று கடந்த காலத்தில் உரிய கல்வி அதிகாரிகளிடம் கோரிக்கைகளை முன் வைத்திருந்தனர். இதன் அடிப்படையிலேயே குறித்த கடமை நிறைவேற்று அதிபர் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.
















