தமிழ்நாட்டை சிறந்த சுற்றுலா வசதிகள் கொண்ட மாநிலமாக உருவாக்க வேண்டுமென அமைச்சர் ராஜேஷ் குமார் அறிவுறுத்தினார்
Share
தமிழ்நாட்டினை சிறந்த சுற்றுலா வசதிகள் கொண்ட மாநிலமாக உருவாக்க வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது; சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமாரின் தலைமையில் சென்னை, வாலாஜா சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கூட்டரங்கில், சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் சுற்றுலாத்துறையின் பல்வேறு பணிகள் ஆய்வு செய்யப்பட்டன. அடுத்த 5 ஆண்டுகளில் தென்கிழக்கு ஆசியாவின் முன்னணி சுற்றுலா இடங்களில் ஒன்றாக தமிழ்நாட்டினை உயர்த்துவது, உயர்தர சுற்றுலா கட்டமைப்பினை உருவாக்குதல், புதிய வகை சுற்றுலா அனுபவங்களை வடிவமைத்து செயல்படுத்துதல், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகள் முன்னெடுத்தல், புதிய, முழுமையான சுற்றுலா அனுபவத்திற்கு தேவையான நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல், தொழிலாளர் பயிற்சிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகள் மூலம் சுற்றுலா நிர்வாகத்தின் திறனை உயர்த்துதல் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் சுற்றுலாத்துறை சார்ந்த அனைத்து அலுவலர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாட்டின் சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தி இந்தியாவிலேயே தமிழ்நாட்டினை சிறந்த சுற்றுலா வசதிகள் கொண்ட மாநிலமாக உருவாக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், சுற்றுலா, பண்பாடு மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை அரசு முதன்மைச் செயலாளர் சீ. ஸ்வர்ணா, முதன்மைச் செயலாளர்/ சுற்றுலா ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் ம. சு. சண்முகம், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக பொதுமேலாளர் சி. லட்சுமி பிரியா, சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















