LOADING

Type to search

இந்திய அரசியல்

தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கான கலந்தாய்வை அமைச்சர் முகமது பர்வேஸ் தொடங்கி வைத்தார்

Share

தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கான கலந்தாய்வை துவக்கி வைத்து, சேர்க்கை ஆணைகளை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜா.முகமது பர்வேஸ் வழங்கினார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இளைஞர்கள் வேலைக்கேற்ற திறனைப் பெறவும் திறன்பெற்ற மனிதவளம் தொழிற்சாலைகளுக்கு தொடர்ந்து கிடைத்திடவும் தொழிற்பயிற்சி நிலையங்கள் வாயிலாக மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் 132 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும் 277 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களும் இயங்கி வருகின்றன. இத்தொழிற்பயிற்சி நிலையங்களில் 70 பொறியியல் தொழிற்பிரிவுகளிலும் 34 பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளிலும் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நவீனகால தொழிற்சாலைகளின் தேவைக்கேற்ப ரொபோடிக்ஸ், எலக்ட்ரிக் வெஹிக்கிள், டிஜிட்டல் மேனுபேக்சரிங், அட்வான்ஸ்டு சி என் சி போன்ற தொழில் 4.0 தொழிற்பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. இத்தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்வதற்கு 8-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 16.05.2026 முதல் விண்ணப்பித்து வருகின்றனர். அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கடைபிடிக்க வேண்டும் என்ற அரசின் நோக்கத்திற்கு இணங்க தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கை முறை இந்த ஆண்டு முதல் முற்றிலும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சேர்க்கை முறையில் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு அவர்களது விருப்பத்திற்கேற்ப தெரிவு செய்த தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தொழிற்பிரிவுகள் குறித்த சேர்க்கை ஆணை அவர்களது மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்படும். அரசு தொழிற்பயிற்சி நிலையம் கிண்டியில் இப்புதிய சேர்க்கை முறை அறிமுக விழாவில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜா.முகமது பர்வேஸ் கலந்துகொண்டு விண்ணப்பதாரர்களுக்கான மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு, முன்னுரிமை அடிப்படையிலான இடங்களுக்கும், மகளிருக்கென ஒதுக்கப்பட்ட இடங்களுக்கும் தேர்வானவர்களுக்கு சேர்க்கை ஆணைகளை வழங்கினார்.