LOADING

Type to search

இந்திய அரசியல்

அந்தமான் கடலில் பிரமாண்ட எரிவாயு புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

Share

ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28-ந்தேதி இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து கூட்டுப்போர் தாக்குதல் நடத்தின. இதில் அந்த நாட்டின் உச்சத்தலைவர் உள்பட நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். இதற்கு பழி வாங்கும் விதமாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளான குவைத், கத்தார். ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள அமெரிக்க போர்ப் படைத்தளங்கள் மீது ஈரான் ராணுவம் ஏவுகணைகளை வீசியும், டிரோன்களை செலுத்தியும் மரண தாக்குதல் நடத்தியது. இதனை தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்து உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் அமெரிக்கா மீது அழுத்தம் ஏற்பட்டதை தொடர்ந்து ஈரான் தாக்குதலை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தியது. மேலும் இஸ்ரேலையும் நிறுத்த அமெரிக்கா வலியுறுத்தியது. இது ஒருபுறம் இருக்க, நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை அதிகரிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இதற்காக இந்தியாவில் எங்கு எரிவாயு கிடைக்கும் என்பதற்கான ஆய்வுகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இந்தியாவிற்கு வரப்பிரசாதமாக மத்திய அரசின் ஆழ்கடல் ஆய்வு திட்டமான சமுத்ர மந்தன் திட்டத்தின் கீழ் அந்தமான் கடற்பகுதியில் மிகப்பெரிய இயற்கை எரிவாயு வளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் புரி வெளியிட்ட அறிக்கையில் அந்தமான் தீவுகளின் கிழக்கு கடற்கரையில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ள ஸ்ரீ விஜயபுரம் -3 பகுதியில் மிகப்பெரிய இயற்கை எரிவாயு வளம் ( புதையல்) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை தோண்டப்பட்ட 3 கிணறுகளில் 2 கிணற்றில் எரிவாயு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த எரிவாயு கிணற்றில் இருந்து 30 முதல் 40 ஆண்டுகள் வரை தடையின்றி தொடர்ந்து எரிபொருளை எடுக்க முடியும் என தகவல் வெளியாகி உள்ளது. 1,900 மீட்டருக்கு அதிகமான ஆழத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட சோதனைகள், தொடர்ச்சியான எரிப்பு மூலம் இயற்கை எரிவாயுவின் இருப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. எரிவாயுவின் தன்மையை மதிப்பிடுவதற்காக ஆயில் இந்தியா நிறுவனம் மாதிரிகளை சேகரித்து வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.