வலிகாமம் வடக்கு மக்கள் இடம்பெயர்ந்து 37 வருடங்கள் நிறைவு:
Share
காணிகளை விடுவிக்கக் கோரி15 ஆம் திகதி பெரும் போராட்டம்
ந.லோகதயாளன்.
வலிகாமம் வடக்கு மக்கள் தமது சொந்தக் கிராமங்களிலிருந்து இடம்பெயர்ந்து 37 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையிலும், உயர் பாதுகாப்பு வலயங்களாக முடக்கப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, எதிர்வரும் திங்கட்கிழமை 15ம் திகதி யாழ்ப்பாணத்தில் மாபெரும் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்தப் போராட்டம் குறித்து மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவினர் ஊடகங்கள் மூலம் விசேட அறிவித்தலை விடுத்துள்ளனர்.
அந்த அறிவித்தலில் அவர்கள் மேலும் தெரிவித்ததாவது:-
“கடந்த 1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் திகதி எமது சொந்த ஊர்களில் இருந்து நாம் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டோம். இதன்படி, கடந்த ஜூன் 5 ஆம் திகதியுடன் எமது இடப்பெயர்வு அலைக்கு 36 வருடங்கள் நிறைவடைந்து, தற்போது 37 ஆவது வருடத்தில் கால் பதிக்கின்றோம். நாட்டில் யுத்தம் நிறைவுற்று 17 வருடங்கள் கடந்துவிட்ட போதிலும், எமக்கான பூரண மீள்குடியேற்ற உரிமை இன்னும் மறுக்கப்பட்டே வருகின்றது.
நாங்கள் குறிப்பாக ஜே/248, ஜே/255 ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் முழுமையாகவும், ஜே/251, ஜே/246 ஆகிய பிரிவுகள் பகுதியளவிலும் (மூன்றில் இரண்டு பங்கு) இதுவரை விடுவிக்கப்படாமல் இராணுவக் கட்டுப்பாட்டிலேயே வைக்கப்பட்டுள்ளன.
இதன்காரணமாக, நாம் தொடர்ந்து அகதிகளாகவே வாழும் அவல நிலை நீடிக்கின்றது. எமது காணிகளை மீட்கப் பல போராட்டங்களையும், உயர் மட்டச் சந்திப்புக்களையும் நடத்திய போதிலும் எமக்கு இதுவரை எவ்விதப் பலனும் கிடைக்கவில்லை.
சொந்த நிலங்களை விடுவிக்கக் கோரி, கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி முதல் நாம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் அறவழியில் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். இதன் தொடர்ச்சியாக, எதிர்வரும் திங்கட்கிழமை யாழ். மாவட்ட செயலக முன்றலில் மாபெரும் அறவழிப் போராட்டமொன்றை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளோம்.
பல தசாப்தங்களாகத் தாயகத்தில் அகதிகளாக வாழும் எமது மக்களின் நில உரிமையை வென்றெடுப்பதற்கான இந்தப் போராட்டத்துக்கு, சிவில் அமைப்புகள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் உங்களால் முடிந்த ஆதரவை வழங்கிப் பலம் சேர்க்குமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.” – என்றனர்.
















