வவுனியா மாவட்டத்தில் டித்வா புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு பிரதி அமைச்சர் தெரிவிப்பு!
Share
(17-06-2026)
வவுனியா மாவட்டத்தில் டித்வா புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீட்டுத் திட்டத்தை வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு பிரதி அமைச்சர் ரி.வி.சரத் தெரிவித்துள்ளார்.
வவுனியாவிற்கு 16ம் திகதி செவ்வாய்க்கிழமை விஜயம் செய்த அவர் செட்டிகுளம் கப்பாச்சி கிராமத்திற்கு சென்று அங்குள்ள நிலமைகளை அவதானித்தார்.
இதன்போது டித்வா புயல் காரணமாக அக் கிராமத்தில் பாதிப்படைந்த வீடுகள் மற்றும் மீள்குடியேறிய நிலையில் முழுமை பெறாத நிலையில் உள்ள மக்களின் வீடுகள் என்பவற்றை பார்வையிட்டதுடன், மக்கள் சந்திப்பிலும் ஈடுபட்டார்.
இதன்போது கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர், டித்வா புயல் காரணமாக வவுனியாவில் பல பகுதிகள் பாதிப்படைந்துள்ளன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீட்டுத் திட்டங்கள் துரிதகதியில் வழங்கப்படும். அத்துடன் மீள்குடியேறிய மக்களின் முழுமை பெறாத நிலையில் உள்ள வீடுகளையும் கட்டி முடிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
அத்துடன், வீரபுரம் பகுதியில் 70 இற்கும் மேற்பட்ட உப குடும்பங்களுக்கும் காணிகள் வழங்கப்பட்ட போதும், அவர்களுக்கு வீட்டுத் திட்டங்கள் வழங்கப்படவில்லை.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் தமக்கான வீட்டுத் திட்டத்தை பெற்றுத் தருமாறு கோரியுள்ளனர்.
இதனை சாதகமாக பரிசீலித்து அவர்களுக்கு தீர்வினையும் விரைவில் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இதன்போது தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
















