அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு விவகாரம் குறித்து பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டுமென கெஜ்ரிவால் கூறினார்
Share
அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு விவகாரம் குறித்து பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது; “அயோத்தி ராமர் கோவிலுக்கு நிலம் வாங்கியது, கோவில் கட்டுமானம் மற்றும் பக்தர்கள் வழங்கிய நன்கொடைகள் ஆகியவற்றில் பெரும் ஊழல் நடைபெற்றுள்ளது. பிரதமருக்கு இது பற்றியெல்லாம் தெரியாமல் இருந்திருக்கக் கூடும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ராம் கோவில் அறக்கட்டளையின் நிர்வாகிகள் பிரதமராலேயே நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவரும் இந்த அறக்கட்டளையில் இடம்பெற்றுள்ளார். இந்த முறைகேட்டை தடுப்பதற்கு பிரதமர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இது குறித்து பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும். இந்த வழக்கில் 8 பேரைக் கைது செய்தது வெறும் ஏமாற்று வேலை. உண்மையான குற்றவாளிகள் வேறு சிலர் இருக்கிறார்கள். இந்த 8 பேரும் வெறும் பகடைக்காய்களே. பிரதமர் யாரைக் காப்பாற்றுகிறார்? எதற்காகக் காப்பாற்றுகிறார்? என்று நான் அவரிடம் கேட்க விரும்புகிறேன். அதேபோல், நன்கொடைகளை திருடியதாகவும், கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளை புண்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளை இடிக்க ஏன் புல்டோசர்களை பயன்படுத்தவில்லை என்பது குறித்து உத்தர பிரதேச முதல்-அமைச்சர் யோகி ஆதித்யநாத் விளக்கம் அளிக்க வேண்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.















