ஈரான் போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறதென்று டிரம்ப் அறிவித்துள்ளார்
Share
ஈரான் போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறதென்று டிரம்ப் அறிவித்துள்ளார். துருக்கியின் அங்காரா நகரில் நேட்டோ உச்சி மாநாடு நடந்து வருகிறது. இதில், நேட்டோ நாடுகள் கலந்து கொண்டுள்ளன. இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பங்கேற்றுள்ளார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ஈரானுடனான போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது என கூறினார். இதனால் அமெரிக்கா-ஈரான் இடையே மீண்டும் போர் பதற்றம் அதிகரித்து உள்ளது. ஈரானுடன் பேசி நேரம் வீணாக்க விரும்பவில்லை. ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் 3 கப்பல்களை தாக்கி ஈரான் அழித்து விட்டது என்று குற்றச்சாட்டாக கூறியுள்ளார். அமெரிக்க தங்களுடைய ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தி விட்டது என கூறி, குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளங்களை தாக்கி ஈரான் பதிலடி கொடுத்தது. இந்த பரஸ்பர தாக்குதலால் கச்சா எண்ணெய் விலை 3.2 சதவீதம் உயர்வடைந்து உள்ளது. ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் வர்த்தக கப்பல்கள் மீது திடீரென்று ஈரான் நேற்று தாக்குதல் நடத்தியது. இதுபற்றி ஈரானின் ஐ.ஆர்.ஐ.பி. என்ற அரசு ஊடகம் வெளியிட்ட செய்தியில், ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில், ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவதற்கு முன்பிருந்த சூழல் இன்னும் திரும்பவில்லை. இந்த ஜலசந்தி வழியே செல்லக்கூடிய அனைத்து கப்பல்களும், ஈரான் அறிவித்த கடல் வழியிலேயே பயணிக்க வேண்டும். அப்படி இல்லையெனில், அந்த கப்பல்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்படாது என்று தெரிவித்து உள்ளது. ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் தாக்குதல்களை நிறுத்துவதற்காக, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஏற்படுத்தப்பட்ட ஒரு வார கால ஒப்பந்தம் காலாவதியாகி உள்ளது. இந்த நிலையில், இந்த தாக்குதல் நடந்துள்ளது என அதுபற்றிய அறிக்கை தெரிவிக்கின்றது.
ஈரானின் முன்னாள் உச்சபட்ச தலைவரான, மறைந்த அயதுல்லா அலி காமேனியின் உடல் நாளை அடக்கம் செய்யப்பட உள்ள நிலையில், டிரம்ப்பின் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால், இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது.















