பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ய சகிப்புத்தன்மையை பற்றி மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பரபரப்பாக பேசினார்
Share
பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் பூஜ்ய சகிப்புத்தன்மையை பற்றி மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பரபரப்பாக பேசியுள்ளார். டில்லியில் நடந்த முதலில் படைகள் என்ற பெயரிலான நிகழ்ச்சி ஒன்றில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறும்போது, பயங்கரவாதம் தொடர்பான இந்தியாவின் அணுகுமுறை என்னவென்று ஒட்டு மொத்த உலகத்தின் முன்பும் இந்தியா தெளிவுப்படுத்தி இருக்கிறது. எங்களுக்கு பயங்கரவாதம் என்பது வெறும் ஓர் அறிக்கை அல்ல. அது இலக்கை அடைவதற்கான ஒரு தொடர் செயலாக இருக்கும். நாங்கள் பயங்கரவாதத்திற்கு எதிராக அதன் வாசல் வரை சென்று தாக்கி விட்டு வருபவர்கள் அல்ல. வீட்டிற்குள் புகுந்து தாக்குபவர்கள். ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையின்போது, ஒட்டுமொத்த உலகமும் இதனை பார்த்தது என்றார். இந்தியாவில் உற்பத்தியாகும் பாதுகாப்பு பொருட்கள் ஏறக்குறைய 100 நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. நாட்டின் பாதுகாப்பு உற்பத்தியின் மொத்த அளவு ஆண்டுக்கு ரூ.1.78 லட்சம் கோடி என்றளவில் உள்ளது என்றும் அவர் கூறினார். இந்தியாவுக்கு தேவையான பாதுகாப்பு சாதனங்களை மட்டும் உற்பத்தி செய்யாமல், உலக நாடுகளுக்கும் நம்பத்தக்க ஒரு பாதுகாப்பு பங்குதாரராக இந்தியா உருவாகி உள்ளது. இதில், இந்திய பெருங்கடலில் இருந்து இந்தோ-பசிபிக் வரை இந்தியாவின் பங்கு தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது என்றும் அவர் கூறினார். 2029-ம் ஆண்டில் ரூ.3 லட்சம் கோடி என்றளவில் பாதுகாப்பு பொருட்களின் உற்பத்தி என்ற மைல்கல்லை அடைவதற்கு ஏதுவாக இந்தியா சிறந்த முறையில் நிலை பெற்றிருக்கிறது என்றும் அவர் கூறினார்.















