நடிகர் ரவி மோகனின் ‘கராத்தே பாபு’ திரைப்படம் ஆகஸ்ட் 28 ம் தேதி வெளியாகிறது
Share
நடிகர் ரவி மோகனின் ‘கராத்தே பாபு’ திரைப்படம் ஆகஸ்ட் 28 ம் தேதி வெளியாகிறது. டாடா’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் கணேஷ் கே பாபு தனது அடுத்த திரைப்படமான ‘கராத்தே பாபு’ படத்தில் நடிகர் ரவி மோகனை கதாநாயகனாக இயக்கி வருகிறார். திரைப்படப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர் ரவி மோகனுடன் இணைந்து பணியாற்றுவது குறித்த தனது நெகிழ்ச்சியான தருணங்களை இயக்குநர் கணேஷ் கே பாபு பகிர்ந்துள்ளார். ‘சில கனவுகள் நனவாக பல ஆண்டுகள் ஆகலாம், ஆனால் இன்று என் நீண்ட நாள் கனவு நிறைவேறியுள்ளது’ என்று தெரிவித்துள்ள அவர், ரவி மோகனுடன் பணியாற்ற வேண்டும் என்பது தனது நெடுநாள் விருப்பம் என்றும், அவருடன் இணைந்தது மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிப்பதாக உருக்கமாகக் கூறியுள்ளார். ரவி மோகனின் 34-வது திரைப்படமாக உருவாகும் ‘கராத்தே பாபு’, அரசியல் மற்றும் ஆக்சன் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ள ஒரு எமோஷனல் த்ரில்லர் திரைப்படமாகும். ஒரு சட்டமன்ற உறுப்பினரின் அதிகாரப்பூர்வ வாழ்க்கைக்குப் பின்னால் இருக்கும் தனிப்பட்ட வாழ்க்கை, உணர்வுகள் மற்றும் நட்பைப் பிரதிபலிக்கும் வகையில் இதன் கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில், தௌதி ஜிவால் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும் நாசர், கே.எஸ்.ரவிகுமார், சக்தி வாசுதேவன், வி.டி.வி. கணேஷ், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்க, எழில் அரசு கே ஒளிப்பதிவு செய்கிறார். ‘கராத்தே பாபு’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 28 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.















