LOADING

Type to search

சினிமா

கரூர் மக்களின் குடிநீர் நெருக்கடிக்கு உடனடி தீர்வு வேண்டுமென ஜோதிமணி எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்

Share

கரூர் மக்களின் குடிநீர் நெருக்கடிக்கு உடனடி தீர்வு வேண்டுமென ஜோதிமணி எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

கரூர் மாவட்ட மக்கள் இன்று மிகக் கடுமையான குடிநீர் நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர். இதுவரை கரூர் மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக அமராவதி அணையிலிருந்து உரிய அளவில் ஒரு முறைகூட நீர் திறக்கப்படவில்லை. மழையின்றி விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டு நிற்கும் நிலையில், குடிநீருக்கே மக்கள் தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த அவசர நிலையை கருத்தில் கொண்டு, நீர்வளத்துறையிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால், விவசாயிகள் நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை ஏற்பட்டது. மதுரை உயர்நீதிமன்றம், கரூர் மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு 29.08.2026 அன்று அமராவதி அணையிலிருந்து படிப்படியாக 10 நாட்களுக்கு நீர் திறக்க உத்தரவிட்டது. அதன்படி,

முதல் நாள் – 3,000 கனஅடி இரண்டாம் நாள் – 3,000 கனஅடி மூன்றாம் நாள் – 2,000 கனஅடி நான்காம் நாள் – 2,000 கனஅடி ஐந்தாம் நாள் – 1,500 கனஅடி ஆறாம் நாள் – 1,500 கனஅடி ஏழாம் நாள் – 1,000 கனஅடி எட்டாம் நாள் – 1,000 கனஅடி ஒன்பதாம் நாள் – 750 கனஅடி பத்தாம் நாள் – 750 கனஅடி என்ற முறையில் நீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாடு அரசு தற்போது வெளியிட்டுள்ள அரசாணையில், தினமும் 1,000 கனஅடி வீதம் மட்டுமே நீர் திறப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நீதிமன்றம் முதல் இரண்டு நாட்களிலேயே 3,000 கனஅடி வீதம் நீர் திறக்க உத்தரவிட்டுள்ள நிலையில், அரசு தற்போது 1,000 கனஅடி என்ற அளவில் நீர் திறப்பது கரூர் மக்களின் அவசர குடிநீர் தேவையை நிறைவேற்றாது. ஏற்கனவே நீர் கிடைக்காமல் தவிக்கும் கரூர் மக்களுக்கு இது மீண்டும் ஒரு அநீதியாக அமையும். 1,000 கனஅடி நீர் திறப்பதால் கரூர் மாவட்டத்திற்கு தேவையான அளவு நீர் சென்றடையாது. காவிரியில் மட்டுமல்ல கடைமடைப் பகுதியில் இருக்கும் கரூர் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் அமராவதியிலும் தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டு வருவது ஏற்புடையதல்ல. நாங்கள் கேட்பது கரூர் மாவட்டத்திற்கு உரிமையுள்ள நீர்ப்பகிர்வை மட்டுமே. கரூர் மாவட்டத்தில் குடிநீருக்கான அவசர நிலையை அரசு புரிந்துகொள்ள வேண்டும். முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் உடனடியாகத் தலையிட்டு, உயர்நீதிமன்ற உத்தரவின்படி புதிய அரசாணை வெளியிட்டு, உரிய அளவு நீரை அமராவதி அணையிலிருந்து கரூர் மாவட்டத்திற்கு உடனடியாக திறந்து விட வேண்டும். கரூர் மக்களின் குடிநீர் உரிமையை பாதுகாக்க வேண்டும்.