நேபாள பேரிடர் பலி எண்ணிக்கை 962 ஆக அதிகரித்துள்ளது இந்தியர்கள் உள்பட 4,500 பேரின் கதி என்னயென்று தெரியாததால் பெரும் சோகம் ஏற்பட்டது
Share
நேபாள பேரிடர் பலி எண்ணிக்கை 962 ஆக அதிகரித்துள்ளது இந்தியர்கள் உள்பட 4,500 பேரின் கதி என்னயென்று தெரியாததால் பெரும் சோகம் ஏற்பட்டது. நேபாளத்தில் இமயமலை பிராந்தியத்தில் உற்பத்தியாகி தெற்கு நோக்கி பாயும் போடேகோஷி ஆற்றில் கடந்த 26-ந்தேதி ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு நாட்டின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளை முற்றிலும் நிர்மூலமாக்கி இருக்கிறது. சாலைகள், பாலங்கள், வாகனங்கள், கட்டிடங்கள், செல்போன் கோபுரங்கள் என அனைத்து கட்டமைப்புகளும் வெள்ளத்துக்கு இரையாகி உள்ளன. மேலும் ஆற்றின் போக்கில் உள்ள நகரங்கள், கிராமங்கள் அனைத்தும் சின்னாபின்னமாகி இருக்கும் நிலையில் அங்கு வசித்த மக்கள் ஆயிரக்கணக்கில் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு உள்ளனர். உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி, இந்தியா உள்பட பல்வேறு வெளிநாடுகளில் அங்கு இருந்து சுற்றுலா சென்றிருந்த நூற்றுக்கணக்கான மக்களும் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போயிருக்கிறார்கள். இவ்வாறு வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டவர்களில் பலர் உயிரிழந்திருப்பது அடுத்தடுத்து மீட்கப்படும் பிணங்கள் மூலம் உறுதி செய்யப்படுகிறது. அந்தவகையில் நேற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோரின் உடல்கள் ஆங்காங்கே மீட்கப்பட்டன. இதன்மூலம் இந்த பேரிடருக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 962 ஆக உயர்ந்துள்ளது. அப்பகுதியில் உள்ள சுரங்கத் தொழிலாளர்கள் பலரை காணவில்லை. அவர்களை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. அவர்கள் பணியாற்றி வந்த சுரங்கங்களின் வாயில்கள் சேறு சகதியால் மூடியிருப்பதால் மீட்புப்பணிகள் பெரும் சவாலாக மாறியிருக்கிறது.
எனவே இந்தியாவில் இருந்து சென்றுள்ள சுரங்க மீட்பு நிபுணர்கள் உதவியுடன், சுரங்கங்களில் மூடியிருக்கும் சேறு சகதிகளை நீக்கி வழி ஏற்படுத்தும் பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.
முன்னதாக அப்பர் திரிசூலி-1 மற்றும் லாங்டாங் கோலா பகுதிகளில் உள்ள சுரங்கங்களில் சிக்கியிருந்த 279 பேர் மீட்கப்பட்டனர். இந்த பணிகளில் நேபாள ராணுவ என்ஜினீயர்கள் நவீன தளவாடங்களுடன் மீட்புப்பணிகளை 24 மணி நேரமும் மேற்கொண்டு வருகின்றனர். இதில் அப்பர் திரிசூலி-3ஏ பகுதியில் மட்டும் 90 பேர் அடங்கிய குழுவினர் ஈடுபட்டுள்ளதாக நேபாள பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது. இதற்கிடையே திபெத்திலும் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட சுமார் 550 பேர் கதி என்ன என்று தெரியவில்லை. வெள்ளம் பாதித்த பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் நடந்து வருகின்றன. 6 நாட்களாக நடந்து வரும் இந்த மீட்புப்பணிகளில் இதுவரை 9,500 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர். இதில் இந்தியா, சீனா, ரஷியா, இங்கிலாந்து உள்பட பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலாப்பயணிகளும் கணிசமாக மீட்கப்பட்டு உள்ளனர். நேபாளத்தில் நடந்து வரும் இந்த மீட்புப்பணிகளில் இந்தியாவை சேர்ந்த பல்துறை நிபுணர்களும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். மீட்கப்படும் உடல்கள் பெரும்பாலும் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்திருப்பதால், தடயவியல் நிபுணர்கள், மரபணு சோதனைகளை நடத்தி வருகின்றனர். இவ்வாறு மரபணு சோதனை முடித்தபின் அவை மொத்தமாக ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு மீட்கப்படும் உடல்கள் பெரும்பாலும் ஒரே இடத்தில் அடக்கம் செய்யும் நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது. நேபாள பேரிடர் நிகழ்ந்து 6 நாட்களை கடந்த பின்னரும் சுமார் 4,500 பேரின் கதி என்ன? என்று தெரியாததால் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.















