LOADING

Type to search

இந்திய அரசியல்

பேருந்தில் இருந்து பழங்குடியின மாணவிகளை தள்ளி விட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறதென திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்

Share

புதுக்கோட்டை அருகே அரசு பேருந்திலிருந்து பழங்குடியின மாணவிகளை தள்ளி விட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறதென திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

புதுக்கோட்டை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரங்கம்மாள் சத்திரம் பகுதியிலிருந்து 10-க்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவிகள், இன்று புதுக்கோட்டையில் உள்ள வெவ்வேறு பள்ளிகளுக்கு செல்வதற்காக அந்த வழியாக வந்த எண் 8 கொண்ட அரசு பேருந்தில் ஏறியுள்ளனர். பேருந்து சற்று தூரம் சென்றவுடன், கூட்டம் அதிகமாக இருப்பதாகக் கூறி அந்த 10 மாணவிகளையும் நடத்துநர் கீழே இறங்க சொன்னதாக கூறப்படுகிறது. மாணவிகள் இறங்க மறுத்த நிலையில், பேருந்தின் கதவை நடத்துநர் திடீரென திறந்ததாகவும், இதில் மாணவிகள் கீழே விழுந்ததாகவும் தெரிகிறது. ஆனால், ஒரு மாணவியை நடத்துநர் கீழே தள்ளிவிட்டதாகவும், இதையடுத்தே மற்ற மாணவிகள் ஒருவர் பின் ஒருவராக கீழே விழுந்தாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் மாணவிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்த தகவல் கிராமம் முழுவதும் பரவியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், காயமடைந்த மாணவிகள் 108 ஆம்புலன்ஸ் மூலமாக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய புதுக்கோட்டை மண்டல போக்குவரத்து துறை அதிகாரிகல், சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுநர் அர்ஜுனனை பணியிடை நீக்கம் செய்தும், தற்காலிக நடத்துநர் மணிகண்டனை நிரந்தர பணிநீக்கம் செய்தும் அதிகாரிகள் உத்தரவிட்டனர். இந்தநிலையில், புதுக்கோட்டை அருகே அரசு பேருந்திலிருந்து பழங்குடியின மாணவிகளை தள்ளி விட்டது அதிர்ச்சியளிக்கிறது. கல்வி கற்கச் செல்லும் குழந்தைகள் மீதே தீண்டாமைக் கொடுமையை நிகழ்த்துவதா? பேருந்தில் கூட்டம் இருப்பதாக கூறி மாணவிகளை கீழே தள்ளி விட்டது மனித நேயம் அற்ற கொடூரச் செயல்; உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.