பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் சட்டமன்றத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்க கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது
Share
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் சட்டமன்றத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்க கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநில குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான சாரா அகமது, இந்தத் தீர்மானத்தை அவையில் தாக்கல் செய்தார். இந்த தீர்மானத்திற்கு, எதிர்க்கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாப் கட்சியும் ஆதரவு தெரிவித்த நிலையில், தீர்மானம் அவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின் மூலம் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதை கட்டுப்படுத்துவதற்கான தகுந்த சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும் என்று மாகாண சட்டமன்றம் பரிந்துரைத்துள்ளது. தடையற்ற இணைய பயன்பாட்டின் காரணமாக சிறார்கள் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும், பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கும் ஆளாகி வருவதாக அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆஸ்திரேலியா, பிரான்ஸ், சீனா மற்றும் பல அமெரிக்க மாநிலங்களில் இதே போன்ற நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதனை பின்பற்றி பாகிஸ்தான் அரசும் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும் பஞ்சாப் மாகாண சட்டமன்றம் வலியுறுத்தியுள்ளது.















