LOADING

Type to search

இலங்கை அரசியல்

கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தில் அமெரிக்கப் படையினருடன் இணைந்து இலங்கை விமானப்படை நடத்தும் கூட்டுப் பயிற்சி!

Share

இலங்கை விமானப்படை, அமெரிக்க தூதரகத்தின் ஒருங்கிணைப்புடன், அமெரிக்காவின் மொன்டானா தேசிய பாதுகாப்புப் படை மற்றும் பசிபிக் வான்படை ஆகியவற்றுடன் இணைந்து நடத்தும் ‘அட்லஸ் ஏஞ்சல் – II 2026’ கூட்டு வான்படைப் பயிற்சி நடைபெற்று வருகின்றது.

இலங்கை விமானப்படையின் கட்டுநாயக்க முகாமில் கடந்த ஓகஸ்ட் 31ஆம் திகதி தொடங்கப்பட்ட இப்பயிற்சி, 5 நாள்கள் தொடர்ந்து நடைபெற்று செப்டம்பர் 4ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.

இந்தப் பயிற்சியானது கண்டி, திகன, கொழும்பு மற்றும் கட்டுநாயக்க ஆகிய பகுதிகளை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற இந்தப் பயிற்சியின் ஆரம்ப விழாவில், இலங்கை விமானப்படையின் திட்டமிடல் பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் தேசப்ரிய சில்வா உள்ளிட்ட விமானப்படைப் பணிப்பாளர் சபையின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கட்டுநாயக்க விமானப்படைத் தள கட்டளை அதிகாரியும் பயிற்சி ஒருங்கிணைப்பு அதிகாரியுமான எயார் வைஸ் மார்ஷல் அமித ஜயமஹ, மொன்டானா தேசிய பாதுகாப்புப் படையின் வான்படை பிரிவின் உதவி அட்ஜூட்டன்ட் ஜெனரல் பிரிகேடியர் ஜெனரல் வெய்ன் தோமஸ் மற்றும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் உட்பட இரு நாட்டுப் படைப்பிரிவின் உயர் அதிகாரிகள் பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.