பீகாரில் கனமழை, வெள்ளத்தால் 40 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
Share
பீகாரில் கனமழை, வெள்ளத்தால் 40 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வட மாநிலங்களில் தென்கிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக பீகாரில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. நேபாளத்தை ஒட்டியுள்ள அம்மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இந்நிலையில், கனமழையால் கங்கை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கங்கை ஆற்றின் கிளை ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கால் பீகார் தலைநகர் பாட்னா, போஜ்பூர், சரன், வைஷாலி, பஹல்பூர், பெகுசாராய், புக்சர், சமஸ்திபூர், முன்கர், கதிகர், அரசியா உள்பட 14 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் 514 கிராம பஞ்சாயத்துகளில் உள்ள ஆயிரக்கணக்கான கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த கனமழை, வெள்ளத்தால் பீகாரில் 40 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, மீட்புப்பணியில் தேசிய, மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்து வெள்ளப்பெருக்கு தொடர்ந்து நீடித்து வருகிறது.















