LOADING

Type to search

பொது

ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய ஆசிரியரை கண்டித்து மாணவிகளின் போராட்டம்

Share

மாணவிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அகத்தீஸ்வரம் பகுதியில் விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த கல்லூரியில் பறக்கை மேலபுல்லுவிளை பகுதியைச் சேர்ந்த வாசுதேவன் என்பவர் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அந்த கல்லூரியில் படிக்கும் முதலாமாண்டு மாணவி ஒருவருக்கு செல்போனில் ஆபாசமான குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

இவர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததால் மாணவி தனது சகோதரரிடம் இதுபற்றி கூறியுள்ளார். உடனே மாணவியின் சகோதரர் சம்பந்தப்பட்ட பேராசிரியரிடம் சென்று நியாயம் கேட்டுள்ளார்.

அப்போது வாசுதேவன் அந்த மாணவியின் சகோதரரை கட்டையால் அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து அந்த மாணவி பேராசிரியர் வாசுதேவன் மீது தென்தாமரைகுளம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த மாணவியை கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்தது.

இந்நிலையில் பேராசிரியர் வாசுதேவன் கல்லூரிக்கு வந்ததால் மாணவிகள் ஆத்திரத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அந்த தகவலின் படி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா தலைமையில் ஒரு குழு அங்கு வந்து மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியது .அதன் பிறகு மாணவிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.