LOADING

Type to search

இலங்கை அரசியல்

மனோ சாட்சி | கிளிநொச்சியில் பிரபாவுடன் சந்திப்பு

Share

கனடா உதயன் பத்திரிக்கை – ஐந்தாம் அத்தியாயம்

• நோர்வேயை அவர் கூட்டி வந்து இருக்கலாம். ஆனால், நாங்கள் பேச வேண்டுமே என்று பிரபா சொன்னார்.
• கருணா அம்மானை எங்கே ஒளித்து வைத்திருக்கிறார்கள் என எங்களுக்கு தெரியும் என்றும் சொன்னார்.
• அவருடனான கடைசி சந்திப்பு என நான் அப்போது நினைக்கவில்லை.
• பிரபாவை அடுத்து, என் பார்வையை கவர்ந்தவர், பொட்டு அம்மான்.

காலகட்டம்: -2004 – ரணிலின் போர் நிறுத்த கால ஆட்சியின் இறுதி கட்டம். சந்திரிக்கா ஜனாதிபதி. ரணில் பிரதமர். ரணிலின் சில முக்கிய அமைச்சுக்களை சந்திரிக்கா பறித்த சூடான சூழ்நிலை.

ஜனாதிபதி சந்திரிகா ஒரு விஷயம் பேச உங்களை அழைக்கிறார், என நண்பர் லசந்த அழகியவண்ண எம்பி எனக்கு தொலைபேசியில் கூறி விட்டு சற்று நேரத்தில் வந்து சந்திக்கிறேன் என்றார்.

அந்நேரம் லசந்த, சந்திரிகாவுக்கு மிகவும் நெருக்கமானவர். அவரது மனைவி ஜனாதிபதி செயலகத்தில் பணி புரிந்தார்.

சொன்னபடி வந்த லசந்த, தனது தொலைபேசியில், ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு அழைப்பு எடுத்து என்னிடம் கொடுத்தார்.  ஜனாதிபதி அழைப்பில் வந்தார்.

“மனோ, நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்”
“என்ன, ஜனாதிபதி அவர்களே?”
“கிளிநொச்சி போய், பிரபாகரனை சந்தித்து எனது ஒரு செய்தியை அவருக்கு நீங்கள் கூற வேண்டும்.”
“பிரபாவுடன், ரணில் பேசுகிறார் என்று கூறித்தானே, நீங்கள் நானும் இடம் பெற்றுள்ள எங்கள் ரணில் அரசாங்கத்தை விமர்சிக்கிறீர்கள். மூன்று அமைச்சுகளையும் பறித்து விட்டீர்கள்.”
“அது. தென்னிலங்கையின் எங்கள் கட்சிகளின் அரசியல். அதுபற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்”
“நான் கவலைப்பட போவதில்லை. ஏனெனில் அது எனக்கு நன்கு தெரியும். பிரபாகரன் கேட்பாரே”
“அவருக்குதான் இந்த பதிலை கூறுகிறேன். நாளை இரவு வீட்டுக்கு லசந்தவுடன் வாருங்கள்.”

அடுத்த நாள் ஜனாதிபதி மாளிகைக்கு இரவில் போனேன்.

நேரடியாக விஷயத்துக்கு வந்த சந்திரிக்கா, தான் ரணில் செய்து வந்த சமாதான பேச்சுவார்த்தையை  தொடர விரும்புவதாகவும், ஏற்பாட்டாளர் நோர்வேயை தானே முதலில் இலங்கைக்கு கூட்டி வந்ததாகவும், தென்னிலங்கை சிங்கள கட்சிகளின் கட்சி அரசியல் சண்டைகளை கணக்கில் எடுக்க வேண்டாம் என்றும், தான் பேச்சுவார்ததைகளுக்கு தயார் என்றும், புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் கூறி, பதில் பெற்று வரும்படி கூறினார்.

சமாதான பேச்சுகளுக்கு எதிராக ரணிலின் ஆட்சியை கடுமையாக எதிர்த்த சந்திரிகாவை, சமாதானத்துக்கு எதிரானவர் என நினைத்துக்கொண்டு புலிகள் சண்டையை மீண்டும் ஆரம்பித்து விடுவார்கள் என சந்திரிக்கா நினைத்திருக்க கூடும்.

நாட்டின் ஜனாதிபதி கூறுகிறார். ஆகவே போனேன். ஆனால், இந்த கிளிநொச்சி விஜயம் பின்னாளில் எனக்கு தென்னிலங்கையில் பெரிய சிங்கள தேசியவாத எதிர்ப்பை ஏற்படுத்த போகிறது என நான் நினைக்கவே இல்லை

இரண்டு நாளில், சந்திரிகாவின் “சமாதான பேச்சுவார்த்தைகளுக்கு நான் தயார். நீங்கள் தயாரா?” “தென்னிலங்கை பெரும்பான்மை கட்சிகளின் கட்சி அரசியல் சண்டைகளை கணக்கில் எடுக்க வேண்டாம்!” “யார் என்னை நாடி வந்தாலும் அடைக்கலம் தருவேன்!”  ஆகிய செய்திகளை எடுத்துக்கொண்டு தூதுவனாக நான், கொழும்பிலிருந்து கட்சி குழுவினருடன் அதிகாலையில் கிளம்பி காலையில் கிளிநொச்சி சென்றடைந்தேன்.

சமாதான செயலகத்தில், என்னை வரவேற்ற தமிழ்செல்வன் அங்கே இருக்கும் விருந்தினர் இல்லத்தில் எம்மை தங்கும்படி கேட்டுக்கொண்டார்.

தமிழ் செல்வனை அந்த சமாதான செயலகத்தில் பலமுறை அதற்கு முன்னரே நான் சந்தித்திருந்த காரணத்தினாலே நானும், தமிழ் செல்வனும் நல்ல அரசியல் நண்பர்களாக மாறியிருந்தோம்.

சிறிது நேரத்திற்கு பிறகு அங்கே கிளிநொச்சியிலேயே இருந்த மற்றுமொரு விருந்தினர் இல்லத்திற்கு புலிகள் எம்மை அழைத்து சென்றார்கள். அங்கு புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்தார்.

அன்றுதான் நானும், பிரபாகரனும் முதல் முதலாக சந்தித்துக்கொண்டோம். என்னை கண்டவுடன், சிரித்தபடி, கைலாகு கொடுத்து, தோளை தொட்டு வரவேற்றார்.

அமர்ந்து பேச தொடங்கினோம். அங்கே புலிகளின் தலைவருடன் தமிழ்ச்செல்வன், பொட்டு அம்மான், நடேசன், புலித்தேவன் போன்ற ஏனைய புலி பிரமுகர்களும் இருந்தார்கள்.

பிரபாவை அடுத்து, அங்கே என் பார்வையை கவர்ந்தவர், பொட்டு அம்மான். எனக்கு ஞாபகம் இருக்கும் வரையில், அவர் சிவந்த நிறத்தில், உயரமாக, அடர்ந்த கறுத்த மீசையுடன் ஒரு மலையாள சினிமா நடிகர் மாதிரி தோற்றமளித்தார்.

சந்திரிகாவின் செய்தியை நான் பிரபாகரனிடம் கூறினேன்.

“நோர்வேயை நானே இலங்கைக்கு கூட்டி வந்தேன். எனவே தொடர்ந்து பேச தயார். பேச விரும்புகிறேன். கொழும்பின் கட்சி அரசியலை கணக்கில் எடுக்க வேண்டாம். இதை பிரதானமாக உங்களிடம் சொல்ல சொன்னார்” என்றேன்.

“சந்திரிகா பேசுவதானால் பேசலாம். சண்டை இடுவதானாலும் சண்டை இடலாம்.” என சிரித்தபடி பிரபாகரன் பதில் சொன்னார்.

மேலும், “கொழும்பில் ஐக்கிய தேசிய கட்சி,  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசியல் விளையாட்டுகள் பற்றி எனக்கு அக்கறை கிடையாது.  ரணிலும், சந்திரிகாவும் எனக்கு ஒன்றுதான். இதை அவரிடம் சொல்லுங்கள்” என்று பிரபாகரன் என்னிடம் கூறினார்.

மேலும், “நோர்வேயை அவர் கூட்டி வந்து இருக்கலாம். ஆனால், நாங்கள் பேச வேண்டுமே. இல்லாவிட்டால் நோர்வேக்கு வேலை கிடையாது”. என்று சொல்லி சிரித்தார்.

அச்சந்திப்பு சுமார் ஒரு மணித்தியாலம் நிகழ்ந்தது. சந்திப்பின் போது பிரபாகரன் அதிகமாக வாய்விட்டு சிரித்துக்கொண்டிருந்தார். நகைச்சுவையாக பல விடயங்களை பேசினார்.

அதுவரை அவரைப்பற்றி, அவர் ஒரு கடினமான மனிதராக இருக்க கூடும் என  நினைத்திருந்தேன்.

அன்று கடினத்துக்கு அப்பால், அவருக்கு நகைச்சுவை உணர்வும் நிறைய இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டேன். நானும் அதே மாதிரி நகைச்சுவை உணர்வாளன் என்ற காரணத்தினாலே இருவரும் பேச வந்த விடயத்தை விட்டுவிட்டு வேறு விடயங்களை பற்றியும் பேசி சிரித்தோம்.

அங்கு இன்னொன்றையும் கவனித்தேன். பிரபாகரனின் இரு புறமும் அமர்ந்திருத்த ஏனைய புலி பிரமுகர்கள் தாமாக எதுவும் பேசவில்லை. நானும், பிரபாகரனும் பேசி சிரிப்பதை கண்டு அவர்களும் சத்தமில்லாமல் சிரித்துக்கொண்டார்கள். அதற்கு மேல் பிரபாகரன் ஏதாவது அவர்களிடம் கேட்டால் மாத்திரம் பதில் கூறினார்கள்.

சினிமா பற்றி இடையில் திடீரென பேசினார். எனது தந்தையின் இலங்கை தமிழ் படங்களை தான் விருப்பத்துடன் பார்த்திருப்பதாகவும், நம் நாட்டு தனித்துவத்தை பிரதிபலிக்கும் சினிமாவை கட்டியெழுப்பியவர் என்ற முறையிலே அவர் மீது தனக்கு மரியாதை இருப்பதாகவும் பிரபாகரன் என்னிடம் கூறினார்.

அடுத்து அவர் கூறியது எனக்கு மகிழ்ச்சியான ஆச்சரியம் அளித்தது. “ஸ்ரீலங்காவுக்கு வந்த நடிகர் சிவாஜி கணேசனுடன், உங்கள் தந்தை இலங்கை சினிமா சார்பில் சச்சரவு பட்டதும் எனக்கு ஞாபகம் இருக்கிறது” என்றார்.

தமிழக சினிமா மீதும், தமிழக கதை நாவல் இலக்கியம் மீதும் தனக்கு இருக்கும் அதீத பற்றை சுருக்கமாக சொல்லிவிட்டு, “ஆனால், நமக்கென்று மண்வாசனை இருக்கிறதல்லவா? அது ஒட்டுமொத்த உலக தமிழுலகில் தனித்துவ அங்கம் அல்லவா” என்றார்.

கருணா அம்மான் பற்றி சந்திரிகா கூறியதையும் நான் பிரபாகரனிடம் கூறினேன். “கருணா அம்மான் வெளியில் வந்தால் அவருக்கு அடைக்கலம் தருவேன். அதை உங்களுக்கு எதிரானதாக எடுத்துக்கொள்ள கூடாது என்று சந்திரிகா கூறுகிறார்”

“அதெப்படி..? அது, எங்களுக்கு எதிரான செயற்பாடுதான் என்று சந்திரிகாவிடம் சொல்லுங்கள்” என காரசாரமான விடயத்தை சிரித்தபடியே சொன்னார்.

அடுத்த விடயத்தை நான் சொல்ல விரும்பி இருக்கவில்லை. ஆனாலும், ஒரு தூதுவன் என்ற முறையில் நேர்மை இருக்கவேண்டுமே. ஆகவே சொன்னேன்.

“அதைபோல் நீங்கள் அவரிடம் வந்தாலும் கூட உங்களையும் வரவேற்று ஏற்றுக்கொள்வார் என சந்திரிகா கூறினார்”

ஒரு வினாடியும் தாமதியாமல் பதில் வந்தது.

“அப்படி ஒருபோதும் நடக்காது. அதற்கான அவசியமும் ஏற்படாது. சந்திரிகாவிடம் கூறுங்கள்.” என பிரபாகரன், இப்போது  சிரிக்காமல் சொன்னார்.

அதற்கு பிறகு மீண்டும் சிரிக்க, சிரிக்க நகைச்சுவையாக பேசினார். கருணா அம்மானை பற்றி பேசினார்.

“கருணா இப்போது கொழும்பிலேதான் ஒளிந்து இருக்கின்றார் என எங்களுக்கு தெரியும். அவர் எங்கு இருக்கிறார் என்பது ஜனாதிபதி சந்திரிகாவிற்கு தெரியாதா? என்ன…? ரணிலிடம் கேட்க சொல்லுங்கள். ரணிலுக்கு தெரியும் என்பது எங்களுக்கு தெரியும். அவர் கருணாவுக்கு ஏற்கனவே அடைக்கலம் கொடுத்து விட்டார்” என்று மீண்டும் சிரிப்புடன் பிரபாகரன் பேசத்தொடங்கினார்.

அப்புறம் ரணிலை பற்றி பேச்சு ஆரம்பமாகியது. “எப்படி இருக்கின்றார் உங்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க?” என்று கண்ணை இமைத்தபடி கேட்டார்.

“அவர் கருணா அம்மானை எங்கே ஒளித்து வைத்திருக்கின்றார் என்றும், அவர் எப்படி கொழும்புக்கு வந்தார் என்றும் எங்களுக்கு தெரியும்” என்று சொல்லி நிறுத்தி விட்டு, “யாரவன் (ர்)…?” என தன் உதவியாளர்கள் பக்கம் திரும்பி கேட்டார்.

“மௌலானா” என்று யாரோ பதில் கூறினார்கள். “எங்களுக்கு தெரியும் என அவரிடம் கூறுங்கள்.” என்றார்.

“நான் இங்கே வரும் பொழுது ரணில் வெளிநாடு போய்விட்டார். உங்களை சந்திப்பது பற்றி அவருக்கு நான் அறிவிக்கவும் இல்லை. இன்னும் சில தினங்களில் கொழும்பு திரும்பி விடுவார். வந்தவுடன் கட்டாயமாக நீங்கள் சொன்னதை அவரிடம் சொல்கிறேன்.” என்று நான் பிரபாகரனிடம் கூறினேன்.

இன்னும் கொஞ்சம் நேரம் பேசிக்கொண்டு இருந்தோம். கொழும்பு அரசியலை பற்றி மேலோட்டமாக பேசினோம். அவர் எந்த இடத்திலும் “இலங்கை அரசாங்கம்” என்ற வார்த்தைகளை பயன்படுத்த வில்லை. “சிங்கள அரசாங்கம்” என்றே திரும்ப, திரும்ப கூறினார்.

மலையக தமிழர் பற்றி, தமிழர் ஐக்கியம் பற்றி, சாதாரண சிங்கள மக்கள் பற்றிய தனது நல்லெண்ணத்தை பற்றியும் பேசினார்.
அத்துடன் இச்சந்திப்பு முடிந்தது.

அதுதான் அவருடனான கடைசி சந்திப்பு என நான் அப்போது நினைத்திருக்கவில்லை. ஒரு சமாதான அரசியல் தீர்வு வந்து விடும். அதன் பின் இலங்கை அரசியல் பரப்பில் அவர் ஒரு தீர்மானக்கரமான அரசியல் பாத்திரம் வகிக்க போகின்றார் என நான் அப்போது எண்ணினேன்.

இதன் பிறகு நான் ஒருநாளும் தமிழீழ விடுதலை புலிகள் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனை சந்திக்கவே இல்லை.

ஆனால்,  அந்நேரம் போர் நிறுத்த உடன்பாட்டின் காரணமாக, புலிகளின் மீது எந்த தடையும் இல்லாத காலகட்டத்தில், புலிகளின் தலைவரை சென்று நான் சந்தித்து, நாட்டின் ஜனாதிபதி கேட்டுக்கொண்டதால், அவரின் செய்தியை கொண்டு சென்று பேசியதை வைத்துக்கொண்டு, அடுத்து வரும் பத்தாண்டுகள், (இன்றும் கூட…) என்னை தென்னிலங்கை இனவாதிகள் திட்டி திரிந்தார்கள்.

கொடுக்கப்பட்ட விலை அளப்பரியது.