LOADING

Type to search

இலங்கை அரசியல்

மன்னாரில் சட்டவிரோத மண் அகழ்வை நிறுத்த கோரி கவனயீர்ப்பு போராட்டம்

Share

மன்னார் நிருபர்

30.03.2023

மன்னார் மாவட்டத்தில் தொடர்சியாக இடம் பெற்று வரும் இயற்கை விரோத செயற்பாடுகளை நிறுத்த கோரி தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இன்று வியாழக்கிழமை (30) காலை அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம் பெற்றது.

மன்னார் மாவட்டத்தில் தொடர்சியாக ஆறுகளை அண்டிய பகுதிகளில் சட்ட விரோதமாக மணல் அகழப்பட்டு ஏனைய மாவட்டங்களுக்கு கடத்தப்படுவதாகவும், உரிய அனுமதி இன்றி காடுகள் அழிக்கப்பட்டு கிராம பகுதிகளில் மணல் அகழ்வு இடம் பெறுவதாகவும் இதனை தடுத்தி நிறுத்த வேண்டிய அரச அதிகாரிகள் இலஞ்சம் பெறுவதாகவும் பொலிஸார் சட்ட விரோத மணல் கடத்தல் காரர்களுக்கு ஆதரவு வழங்குவதாகவும் இவ்வாறான இயற்கை விரோத செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என கோரி குறித்த போராட்டம் இடம் பெற்றது.

குறித்த போராட்டத்தில் அருட்தந்தை ஜெபாலன் குரூஸ், பேசாலை முருகன் கோவில் பிரதம குரு தர்மகுமார குருக்கள், நெப்ஸோ அமைப்பின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் பெனடிற் குரூஸ், நானாட்டன் பிரதேச சபை முன்னால் தவிசாளர், மாந்தை மேற்கு பிரதேச சபை மற்றும் நானாட்டன் பிரதேச சபை முன்னால் உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

சட்ட வாக்கத்தை பாதுகாக்க வேண்டிய பொலிஸாரே லஞ்சம் வாங்காதே,மன்னாரை பாலைவனமாக்க போகின்றீர்களா?,சட்டத்தரணிகளே மண் மாபியாக்களை காப்பாற்றாதே,அரசாங்க அதிபரே உங்கள் மெளனம் கலையட்டும்,விவசாய நிலங்கள் உவர் ஆகிவிட்டது.

வாழ்வதற்கு வழியேது,பொறுப்பற்ற புவிசரிதவியல் திணைக்களமே விழித்துக்கொள்ள மாட்டீர்களா? போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டகாரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் இறுதியில் மண் அகழ்வுக்கு எதிராகவும் மன்னார் மாவட்டத்தில் இடம் பெறும் சட்ட விரோத செயற்பாடுகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாகவும் தயாரிக்கப்பட்ட துண்டுப்பிரதிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் பொது மக்களுக்கு வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.