LOADING

Type to search

கனடா அரசியல்

நிவாரணம் செந்தில்குமரனின் MGR107 இசை நிகழ்ச்சி மூலம் திரட்டப்பட்ட $212,807.19 நிதி தாயகத்தில் பல்வேறு வைத்தியசாலைகளின் தேவைகளுக்கு வழங்கப்படவுள்ளது.

Share

நிவாரணம் அமைப்பினூடாக தாயகத்தில் வறுமையில் வாடும் மக்களிற்கான பல்வேறு பணிகளைச் செய்வதோடு உயிர்காக்கும் இதய சத்திரசிகிச்சை, குருதிச்சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட பல பணிகளைச் செய்துவரும் திரு. திருமதி செந்தில்குமரன் இணையர் தம் பணிக்கு உதவுபவர்களிற்கு நன்றி நவிலும் வகையில் Petit Delight என்ற உணவுச்சாலையில் ஒழுங்குபடுத்திய காலை உணவுடன் கூடிய நிகழ்வில் பலரும் வருகை தந்திருந்தனர். அவர்களில் சிலர் சிறப்புரைகள் ஆற்றினர்.

தன் தாயகப் பணித் திட்டங்களிற்கு மனப்பூர்வமாக ஆக்கமும் ஊக்கமும் நல்கியவர்களிற்கு செந்தில்குமரன் மனம் நெகிழ்ந்து நன்றி செலுத்தியதோடு அண்மையில் அவர் நிகழ்த்திய MGR 107 இசை நிகழ்ச்சியில் $212,807.19 சேகரிக்கப்பட்டதாக அறிவித்தார் செந்தில்குமரன்!

“யாழ்ப்பாண மருத்துவமனையின் இருதய சத்திர சிகிச்சை பிரிவிற்கு மிகவும் அவசியமாக தேவைப்படும் TOE இயந்திரத்தினை பெற்று தருவோம், சாவகச்சேரி மருத்துமனைக்கு அவசரம் தேவைப்படும் 2 குருதி சுத்திகரிப்பு இயந்திரங்களையும் பெற்று கொடுப்போம், உயிருக்கு போராடும் இளம் சிறார்களின் சத்திர சிகிச்சையினை ஒழுங்கு செய்து உயிர் காப்போம், கடும் சிறுநீரக வருத்தத்தினால் அவதியுறும் நோயாளிகளின் குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் வழங்கி அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவோம், MGR107 இல் திரட்டப்பட்ட $212,807.19 நிதி, தாயகத்தில் பல நூற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்ற உதவ போகிறதென்பதினை பெரு மகிழ்ச்சியுடன் அறிய தருகின்றேன். இந்த முயற்சியை முன்னெடுக்கும் போதெல்லாம் எனக்கு உதவும் அத்தனை மனித கடவுள்களுக்கும் நன்றி!” எனும் உறுதிகளை செந்தில்குமரன் வழங்கியுள்ளார்.

“தெய்வத்தால்ஆகாதெனினும் முயற்சிதன் மெய் வருத்தக் கூலி தரும்” என ஐயன் வள்ளுவர் கூற்றிக்கேற்றாற்போல், கடந்த பல காலமாக தன் கடும் முயற்சியினால் பெரும் நிதியினை தன் இசை நிகழ்வுகளின் ஊடாக, அதுவும் குறிப்பாக உள்ளூர் கலைஞர்களை வைத்தே நடாத்தி, ஈழத்தில் பாரிய இதய சத்திர சிகிச்சைகளை ஒழுங்கு செய்து, பறிபோகும் நிலையிலுள்ள பிஞ்சு உயிர்களை மீட்டு அவர்கள் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கும் மின்னல் செந்தில் குமரனுக்கு, பெரும் தர்ம சிந்தனை கொண்ட மக்கள் கூட்டம் மிக பெரிய ஆதரவினை வழங்கி வருவதனை கண்கூடாக பார்க்க முடிகிறது.

இதய சத்திர சிகிச்சைகள் மட்டுமல்லாது தமிழர் தாயகத்தில் வைத்தியசாலைக்கு தேவைப்படும் முக்கிய உபகரணங்களை பெற்றுக் கொடுப்பதன் மூலம், அதுவும் சிறுநீரக நோயின் நிலை முற்றி, உயிர் வாழ குருதி சுத்திகரிப்பு செய்யும் வேண்டும் என்ற நிலையிலுள்ள நோயாளிகள் வாழும் பகுதிகளை இனம் கண்டு, அவர்கள் வாழ்விடங்களுக்கு அருகிலேயே அரசாங்க வைத்திய சாலைகளில் குருதி சுத்திகரிப்பு நிலையங்களை திறந்து வைத்துள்ளதோடு, வறுமை கோட்டின் கீழுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகளின் குடும்பங்களுக்கு வாழ்வாதாரங்கள் வழங்கி பெரும் சேவையினை மக்களுக்கு வழங்கி வருகிறார்.

மருத்துவ உதவிகளால் மறுவாழ்வளிக்கும் “மின்னல்” இசைநிகழ்ச்சி புகழ் செந்தில்குமரனின் நிவாரணம் அமைப்பின் செயல்பாடுகளினால் பல நூறு உயிர்கள் காக்கப்பட்டு, அவர்கள் தம் குடும்பத்தினருடன் இரண்டாம் முறையாக வாழும் பாக்கியத்தினை பெற்று மகிழ்வுடன் இருக்கிறார்கள் என்பதே உண்மை.

இந்த கருத்தொருமித்த மக்கள் பணி ஆற்றும் இந்நல்லிதயம் கொண்ட இணையரால் மேலும் பல தாயக மக்களின் கண்ணீர் துடைக்கப்பட்டு வாழ்வு ஒளி பெற இதயம் நிறைந்த வாழ்த்துகள்!

– சிவவதானி