LOADING

Type to search

இலங்கை அரசியல்

கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு இலங்கை தமிழரசு கட்சி தலைவர் சிவஞானம்.சிறிதரன் புகழ் அஞ்சலி

Share

நடராசா லோகதயாளன்.

ஈழத்தையும், ஈழத்தமிழர்களையும் ஆழ நேசித்த தமிழ்த்தேசியவாதியான திரு.மா.க.ஈழவேந்தன் ஐயாவின் மறைவு வருத்தமளிக்கிறது என தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

”யாழ்ப்பாணத்தில் கொழும்புத்துறையில் பிறந்த இவர், மண்டைதீவு மண்ணின் முன்னாள் கிராமசபைத் தலைவர் கைலாயபிள்ளை ஐயாவின் மூத்த மகளான அருளாம்பிகையை திருமணம் செய்ததன் மூலம் தீவகத்துக்கும் தனக்குமான இறுக்கம் மிகுந்த பிணைப்பை உருவாக்கிக் கொண்டார். இலங்கை மத்திய வங்கியில் பணியாற்றி, பின்னர் பொருளாதார ஆய்வுத் திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளராக கடமையாற்றி ஓய்வுபெற்றார்.

அரசதுறையின் உத்தியோகத்தராக இருந்துகொண்டே அரசின் இனவாத அடக்குமுறைகளை எதிர்த்துப் போராடிய இவரது வாழ்க்கைப் பயணம் எம்மில் பலருக்கு ஒரு கனத்த செய்தியைச் சொல்ல வல்லது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின்; ஆரம்பகால உறுப்பினர்களுள் ஒருவராகவும், தமிழரசுக் கட்சி – தமிழர் விடுதலைக் கூட்டணியின் பங்காளிக் கட்சியாக இருந்த காலத்தே அதன் கொழும்புக் கிளைத் தலைவராகவும் இருந்து ஈழவேந்தன் ஐயா ஆற்றிய அரசியற்பணி மிகக் கனதியானது. ஈழவிடுதலைப் போரின் மீதும் அதன் நியாயப்பாட்டின் மீதும் அதீத பற்றுறுதி மிக்கவராக இருந்த காரணமாகவே கனகேந்திரன் என்னும் தனது இயற்பெயரைக்கூட ஈழவேந்தன் என மாற்றம் செய்து, அதனையே தனது அடையாளமாகவும் மாற்றியிருந்தார்.

தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வென்பது தமிழீழமாக மட்டுமே இருக்க முடியும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்த ஈழவேந்தன் ஐயா, அதனையே கொள்கையாகக் கொண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான காவலூர் வி.நவரத்தினத்தால் உருவாக்கப்பட்ட தமிழர் சுயாட்சிக் கட்சியில் இணைந்து, அந்தக் கொள்கைக்காகவே அயராதுழைத்தவர்.

இனக்கலவரங்களின் தோற்றுவாய்கள் விரிவடையத் தொடங்கிய 1981களில் தமிழகம் சென்றிருந்த இவர், விடுதலைப்புலிகளுக்கு மருந்து கொள்வனவு செய்தார் என்ற குற்றச்சாட்டில் 1997 இல் கைதுசெய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறையிருந்து பின் நாடு திரும்பினார். 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டு அரசியற்பணியாற்றிய ஈழவேந்தன் ஐயா, போர் மௌனிக்கப்பட்டதன் பின்னரான அரசியல் நீரோட்டத்திலும் தன்னை இணைத்துக்கொண்டதன் அடிப்படையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினராக இருந்தும் ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை கோரிய பயணத்தின் பங்குதாரராக பல்வேறு பணிகளை ஆற்றியுள்ளார்.

முதுமை, அது தந்த இயலாமை உள்ளிட்ட உடல்வாதைகள் அனைத்தையும் புறந்தள்ளி தனது 91வது வயது வரை ஈழத்தமிழர்களுக்காகவும், தமிழ்த் தேசிய இனத்தின் நிரந்தர அரசியல் தீர்வுக்காகவும் தான் கொண்ட கொள்கையினின்று வழுவாத பெருமனிதனாக இதயசுத்தியோடு உழைத்த மாமனிதர் ஈழவேந்தன் ஐயாவின் ஆத்மா சாந்திபெற பிரார்த்திப்பதோடு, அவரது இழப்பினால் துயருற்றிருக்கும் அவரது பிள்ளைகளான யாழினி, எழிலினி மற்றும் உறவினர்களின் துயரில் நானும் பங்குகொள்கிறேன்” என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் தனது அனுதாபச் செய்தியில் கூறியுள்ளார்.