LOADING

Type to search

இலங்கை அரசியல்

“தமிழ்த் தேசியத்தை ஓர் அஞ்சலோட்டமாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கொண்டு செல்கின்றனர்”

Share

மூத்த போராளி காக்காண்ண தெரிவிப்பு.

“தேசியம் சார்ந்த எந்த நிகழ்விலும் யாழ்ப்பாண. பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்றே வந்துள்ளனர். “அங்கையிருந்து இஞ்சைவந்து…” என்று அவர்களின் பங்களிப்பை கொச்சைப்படுத்தினார் சாணக்கியன்”.

எல்லா நெருக்கடியான காலங்களிலும் அடுத்தடுத்த தொகுதியினரிடம் இந்த உணர்வைக் கடத்துகின்றனர். கடந்த 15ஆம் திகதி (வியாழக்கிழமை) தொழில்நுட்ப உதவியாளராக சூறாவளி வீசிய காலத்தில் மட்டக்களப்பில் பணியாற்றிய ப. திருக்கேதீஸ்வரன் அவர்கள் வெளியிட்ட ‘புழுதிக்கதைகள்’ என்ற நூலின் வெளியீடு இடம்பெற்றது.

அதில், சேதமடைந்த மன்னம்பிட்டி பாலத்தை யாழ்ப்பாண. பல்கலைக்கழக மாணவர்கள் திருத்த உதவினர் என்ற விடயத்தைக் குறிப்பிட்டார்.

பின்னர், தேசியம் சார்ந்த எந்த நிகழ்விலும் யாழ்ப்பாண. பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்றே வந்துள்ளனர். “அங்கையிருந்து இஞ்சைவந்து…” என்று அவர்களின் பங்களிப்பை கொச்சைப்படுத்தினார் சாணக்கியன்.

இரா. பரமதேவாவின் காலத்தில் மட்டக்களப்பில் நடைபெற்ற மாணவர் போராட்டங்களில் தியாகி சிவகுமாரனும் சத்தியசீலனும் கலந்துகொண்டனர் என்ற வரலாறு இவருக்குத் தெரிந்திருக்காது. ஏனெனில், அப்போது இவர் பிறந்திருக்கவில்லை.

இவரும் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு எதிராக விஷத்தைக் கக்குகிறார். 2004இலேயே அரியநேத்திரனின் பங்கு எத்தகையதாக இருந்தது என்பதை தமிழ் அரசின் தலைவரும் துணைத் தலைவரும் சொல்லிக்கொடுக்கத் தவறிவிட்டனர்.

சம்பந்தன் ஐயாவுக்கு வயதாகிவிட்டது. அவர் பதவி விலகி அடுத்தவர்களுக்கு வழிவிட வேண்டும் என அமைப்பின் அங்கீகாரமின்றி சுமந்திரன் சொன்னபோது அவர்மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கத் தவறியவர்கள் மூத்தவர்கள் தொடர்பாக (சிறீநேசன்) முறையற்ற விதத்தில் ஒருமையில் வார்த்தைப் பிரயோகங்கள் மேற்கொண்டபோது ஒழுங்கைப் பேணாதவர்கள் தந்தை செல்வாவின் அமைப்பின் பெயரால் எந்த நடவடிக்கையும் எடுக்கத் தகுதியற்றவர்கள் – அமைப்பின் பெயரால் சுமந்திரன் தன்னிச்சையாக மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பாக இதுவரை ஏழுக்கும் மேற்பட்ட தடவைகள் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

1989 தேர்தலில் அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், சம்பந்தன், ஆனந்தசங்கரி, யோகேஸ்வரன், போன்ற பிரபலங்களை தோற்கடித்தவர்கள் எமது மக்கள். ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட வாக்குகள் பெற்ற ஒருவரை இன்றுவரை வாக்களிப்பு மூலம் தெரிவு செய்யாதவர்கள் எமது மக்கள் என்பதை சாணக்கியனும் உணர்ந்து கொள்ளவேண்டும்.

மேய்ச்சல் தரை விவகாரத்தில் “மாடுகளுக்கு புல்லு வெட்டிப் போட முடியாதா?” என ஜனாதிபதி தன்னிடம் கேட்டதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சாணக்கியன் சொன்னார்.

இதன் அர்த்தம் “மேய்ச்சல் தரையை ஆக்கிரமித்தவர்களை அகற்ற நான் தயாரில்லை”, என்பதுதான். இப்போது ஜனாதிபதி பேச்சுக்கு அழைக்கிறார் என்றால் நாளாந்தம் எத்தனை தொன் புல்லுத் தர ஆயத்தமாக இருக்கிறார் என்றுதான் கேட்க முடியுமே தவிர, எப்போது இவர்களை அகற்றப்போகிறார் என்று பேச முடியாது.

மேய்ச்சல்தரை விவகாரத்தில் 24 மணி நேரத்துக்குள் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து அகற்றப்பட்ட மாவட்டச் செயலர் திருமதி கலாமதி பத்மராஜா கண்ணீருடன் தன்னை அனுப்பி வைத்த மாவட்ட செயலக ஊழியர்களிடம் சொன்ன வார்த்தைகளை சாணக்கியனுக்கு நினைவூட்டுகிறோம். “சோர்ந்து போகாதீர்கள்! சோரம் போகாதீர்கள்.

எல்லாவிதத் தடைகளையும் துரோகங்களையும் தாண்டி தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தில் முன்னோக்கிச் செல்வோம். புலம்பெயர் உறவுகளும் தாயகத்திலுள்ளோரும் கைகோர்த்து இதனை சாத்தியமாக்குவோம்.