LOADING

Type to search

இலங்கை அரசியல்

இலங்கையின் 9 ஆவது ஜனாதிபதியாக வருகிறவருக்கு தமிழ் பொது வேட்பாளர் என்கிற விடையம் ஒரு பாடமாக அமைய வேண்டும்.-

Share

மன்னாரில் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் தெரிவிப்பு.

(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்)

(04-09-2024)

சிதறிக்கிடக்கும் தமிழ் தேசியக் கட்சிகளை ஒன்றிணைத்து ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் நோக்குடன் தமிழ் பொது வேட்பாளர் ஜனாதிபதி தேர்தலில் களம் இறக்க பட்டுள்ளதாகவும்,இந்த நாட்டின் 9 ஆவது ஜனாதிபதியாக வருகிறவருக்கு ஒரு பாடமாக இது அமைய வேண்டும் என தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

மன்னாரில் ரெலோ அலுவலகத்தில் 04-09-2024 புதன்கிழமை மதியம் இடம் பெற்ற மக்கள் சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,

கடந்த காலங்களில் ஏற்பட்ட ஏமாற்றங்களின் விளைவாகவும் நாங்கள் தொடர்ந்தும் ஏமாறுவதற்கு தயார் இல்லை என்பதை காட்டு வதற்கான ஒரு களமாக இத்தேர்தலை மக்கள் பயன்படுத்த வேண்டிய ஒரு நிலைப்பாடு மக்கள் மத்தியில் இருக்கிறது.

இதன் காரணமாக இத்தேர்தலில் என்னை களம் இறங்கியுள்ளனர்.இணைந்த வட கிழக்கில் இருக்கின்ற மக்கள் அதி கூடிய வாக்குகளை அளிக்க வேண்டும்.

கடந்த காலங்களில் நாங்கள் ஏமாற்ற பட்டுள்ளோம் என்பதனை காட்டுகின்ற போது நாங்கள் போராடிய ஒரு இனம்.தொடர்ச்சியாக சுதந்திரம் அற்று இருக்கின்றோம் என்ற விடையத்தின் ஊடாக ஒரு தீர்வு கிடைக்க வேண்டும்.

ஒரு அடையாளத்திற்காக வே நான் சங்கு சின்னத்தில் போட்டியிடுகின்றேன்.நீங்கள் சங்கு சின்னத்துக்கு வழங்கும் வாக்கு உங்களுக்கானது. தமிழன் தமிழனாக இருக்க வேண்டும்.தமிழ் மக்கள் வடக்கு கிழக்கில் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும்.

சிதரிக்கிடக்கும் தமிழ் தேசியக் கட்சிகளை ஒன்றிணைத்து ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் ஒரு நோக்காக இதனை அனைவரும் பார்க்க வேண்டும்.

யாரோ ஒருவர் ஜனாதிபதியாக வெற்றி பெறுவார்.யாராகவும் இருக்கலாம்.இந்த நாட்டின் 9 ஆவது ஜனாதிபதியாக வருகிறவருக்கு ஒரு பாடமாக இது அமைய வேண்டும்.எங்களை தலைவர்கள் ஏமாற்ற இருந்தாலும் மக்களாகிய நாங்கள் தயார் இல்லை என்பதை காட்ட வேண்டும்.

எங்களுடன் 7 தமிழ் கட்சிகள் இணைந்துள்ளன..எனினும் இலங்கை தமிழரசு கட்சி அதில் இணையவில்லை.இலங்கை தமிழரசுக் கட்சியில் இருக்கும் ஒரு சிலர் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்க கூடாது என்கிற முடிவை எடுத்துள்ளார்கள்.அது அவர்களின் உரிமை.என தெரிவித்தார்.

இதேவேளை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின் மாவட்ட அமைப்பாளரும்,பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் செயலாளருமான டானியல் வசந்தன் தனது கருத்துக்களை தெரிவித்திருந்தார்.