LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ்ப்பாணம் நாவலர் மண்டபத்தை வாக்குச்சாவடியாகப் பயன்படுத்த வேண்டாம்!

Share

யாழ்ப்பாணத்தில் உள்ள நாவலர் மண்டபத்தை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குச்சாவடியாக பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுமாறு கோரி சர்வதேச இந்து மத பீடத்தின் செயலாளர் இராமச்சந்திரக் குருக்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளருக்கு எழுத்து மூலமாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டதாவது,

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமான் என்ற உன்னத புருஷரைச் சைவத் தமிழ் உலகம் என்றும் நினைவில் கொள்ளும் வகையிலும் அவர் தம் கொள்கைகளை பேணும் நினைவாலயமாக ஆறுமுகநாவலர் கலாசார மண்டபம் உருவாக்கப்பட்டது.

பொதுச் செயற்பாடுகளுக்கும் பொதுச் சேவைகளுக்கும் இந்த மண்டபம் கடந்த காலங்களில் பயன்படுத்தப்பட்டுவந்த போதிலும் அதன் புனிதத் தன்மையைப் பேணவேண்டும் என்ற விடயம் கவனத்தில் கொள்ளப்படவில்லை.

நாவலர் கலாசார மண்டபம் உருவாக்கப்பட்டதற்கான நோக்கம், அங்கு புனிதம் பேண வேண்டிய கட்டாயம், ஆன்மிக ஸ்தலமாக குறித்த மண்டபம் போற்றப்பட வேண்டும்.

கடந்த காலத்து நிர்வாகங்களோடு முரண்பாடு காரணமாக நாவலர் கலாசார மண்டப வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.

தற்போது, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் அதிக கவனம் எடுத்து இந்த மண்டபத்தின் செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் நிலையில், தேர்தல் முதலான பொது விடயங்களில் கடமைக்கு அமர்த்தப்படுகின்றவர்களுக்கு இத்தகைய நடைமுறைகளைப் பின்பற்றுவதில் நிச்சயம் அசௌகரியம் ஏற்படும்.

இக்கலாசார மண்டபத்தின் புனிதத்தையும் சட்டதிட்ட நடைமுறைகளையும் விமர்சனத்திற்கு உள்ளாக்கும். எனவே, தயவுசெய்து இத்தகைய நிலைமையினைக் கருத்திற்கொண்டு இந்த மண்டபத்தை வாக்குச் சாவடியாகப் பயன்படுத்தும் செயற்பாட்டைத் தவிர்த்துக்கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தின் பிரதிகள் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.