அமெரிக்காவில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் 40 ஆண்டுகளுக்கு பின் மரண தண்டனை நிறைவேற்றம்
Share
அமெரிக்காவில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில், 40 ஆண்டுகளுக்கு பின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அமெரிக்காவில் போர்ட் லாடர்டேல் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த இளம்பெண் பேட்ரீசியா பேட்டி கிப்போர்டு. 1982-ம் ஆண்டு, 18 வயது இருக்கும்போது, புது வருட கொண்டாட்டத்திற்காக தோழியுடன் ஒன்றாக புளோரிடா மாகாணத்தின் ஹாலிவுட் பகுதியருகே உள்ள ஓட்டலில் விருந்து சாப்பிட சென்றுள்ளார். அப்போது நீச்சல் குள பராமரிப்பாளராக பணியில் இருந்தவர் டென்னிஸ் சொச்சோர். சொச்சோர் மற்றும் அவருடைய சகோதரரின் வாகனத்தில், தோழியுடன் சேர்ந்து கிப்போர்டு சில மணிநேரம் பேசியபடி இருந்துள்ளார். அப்போது தோழிக்கு உடல்நலன் பாதிக்கப்படவே, தூங்கி ஓய்வெடுக்க, தன்னுடைய காருக்கு சென்று விட்டார். சொச்சோர் சகோதரர்களுடன் கிப்போர்டு தனியாக விடப்பட்டார். ஏற்கனவே மாலையில், கிப்போர்டிடம் சொச்சோர் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனால், அந்த இடத்தில் இருக்க கிப்போர்டுக்கு விருப்பமில்லை. இந்நிலையில், உணவு வாங்க செல்லலாம் என கூறி தன்னுடைய வாகனத்தில் கிப்போர்டை அந்த இரவு நேரத்தில் சொச்சோர் அழைத்து சென்றார்.
ஆனால், ஆளில்லாத பகுதிக்கு வந்ததும் வண்டியை நிறுத்தி விட்டு, கிப்போர்டை மறைவான பகுதிக்கு இழுத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்து, அடித்து, தாக்கியுள்ளார். பின்னர் அவரை கொலை செய்து விட்டார். இந்த சம்பவத்தின்போது, உடன் இருந்த கேரி சொச்சோர் விசாரணையில் கூறும்போது, குடிபோதையில் பயந்து போய் இருந்தேன். இதில் எந்த தொடர்பும் இல்லை என கூறினார். அவர் வழக்கில் சேர்க்கப்படவில்லை. 1987-ம் ஆண்டு டென்னிசை நீதிமன்றம் குற்றவாளி என அறிவித்தது. அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து டென்னிஸ், சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், 74-வது வயதில், நேற்று மாலை அவருக்கு விஷ ஊசி செலுத்தப்பட்டது. ஓரிரு நிமிடங்களில் அவர் மரணமடைந்து விட்டார் என மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். 40 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டு இருந்த டென்னிஸ், இளம்பெண் கிப்போர்டின் உடலை எந்த இடத்தில் மறைத்து வைத்திருக்கிறார் என்ற தகவலை காவலரிடமோ, இளம்பெண்ணின் உறவினர்களிடமோ இதுவரை கூறவில்லை. இந்த சூழலில், அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளது.















