இங்கிலாந்தில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு வாழ்நாள் சிறை
Share
இங்கிலாந்து நாட்டில் உள்ள வால்சால் நகரில், கடந்த ஆண்டு அக்டோபர் 25-ந்தேதி, சீக்கிய பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மதம் மற்றும் இன ரீதியான வெறுப்பு காரணமாக இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் அரங்கேறியதாக தகவல் வெளியானது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், 32 வயதான ஜான் ஆஷ்பி என்ற வாலிபரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது, அவர் தீவிரமான இஸ்லாமிய மத வெறுப்பு கொண்டவர் என்பதும், பாதிக்கப்பட்ட பெண்ணை இஸ்லாமியர் என்று நினைத்து அவர் இந்த குற்றத்தை நிகழ்த்தியுள்ளார் என்பதும் தெரியவந்தது. பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்குமூலத்தின்படி, ஜான் ஆஷ்பி அவரை பின்தொடர்ந்து சென்று தாக்கினார் என்றும், தாக்குதலின்போது மதம் மற்றும் இன ரீதியான வெறுப்பு கோஷங்களை அவர் எழுப்பினார் என்றும் கூறியுள்ளார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை இங்கிலாந்தின் பிர்மிங்காம் கிரவுன் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, குற்றவாளி ஜான் ஆஷ்பிக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் குற்றவாளிக்கு பரோல் வழங்குவதற்கு குறைந்தபட்சம் அவர் 14 ஆண்டுகள் வரை சிறையில் இருக்க வேண்டும் என நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.















